நடிகர்கள் : தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ்
இசை : சகினா சேவியர்
ஒளிப்பதிவு : கார்த்திக் நல்லமுத்து
இயக்கம் : விநாயக் துரை
தயாரிப்பு : விநாயக் துரை
அறிமுக இயக்குநர் விநாயக் துரை இயக்கி, தயாரித்திருக்கும் ஹைபர் லிங்க் கானர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘வல்லவன் வகுத்ததடா’ படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
பணம் தான் முக்கியம், அதற்காக எப்படிப்பட்ட தவறுகளையும் செய்யலாம், என்று வாழும் ஐந்து பேர். வறுமை வாட்டினாலும், பிறருக்கு உதவி செய்வதோடு, நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒருவர். இந்த ஆறு பேரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாதவர்களாக இருந்தாலும், இவர்களுக்கான பணத்தேவை இவர்களை தொடர்புப்படுத்த, அதனால் இவர்களின் வாழ்வில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது, என்பதை சுவரஸ்யமான திரைக்கதையோடு ஹைபர் லிங்க் ஜானரில் சொல்வதே ‘வல்லவன் வகுத்ததடா’ படத்தின் கதை.
தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், கதையின் நாயகர்களாக நடித்திருப்பது இதுவே முதல் முறை. அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து மற்றும் இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் பட்ஜெட்டுக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், கதைக்களத்தின் தரத்தை உயர்த்த கடுமையாக உழைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பாளர் அஜய், நீளத்தின் அளவை நேர்த்தியாக குறைத்து திரைக்கதையை வேகமாக பயணிக்க செய்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கும் விநாயக் துரை, பிரமாண்டமான முறையில் சொல்லக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும், அதை சிறு பட்ஜெட்டில் எடுக்கும் முயற்சியில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.
”நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக் துரை, அமைத்திருக்கும் சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் அதை ஹைபர் லிங்க் முறையில் சொன்ன விதம் படத்தை ரசிக்க வைக்கிறது.
எந்தவித தேவையில்லாத காட்சிகளையும் திணிக்காமல், தான் சொல்ல வந்ததை மிக தெளிவாகவும், அதே சமயம் வேகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் விநாயக் துரை, படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை, அடுத்தது என்ன நடக்கும்:? என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்களை படம் பார்க்க வைக்கிறார்.
ரேட்டிங் 3.8/5
Comments are closed.