‘கோச்சடையான்’ ரிலீஸுக்காக காத்திருக்கும் சூப்பர்ஸ்டார் தமிழில் அடுத்ததாக எந்த ஒரு படத்திலும் நடிக்கும் அறிகுறியே தென்படவில்லை. அப்படியே அவர் நடிப்பதாக முடிவு செய்தாலும் துவக்கத்திலேயே நின்றுபோன ‘ராணா’வுக்கு மீண்டும் உயிர்கொடுப்பாரா அல்லது ‘ஐ’ படத்தை முடித்துவிட்டு வரும் வரை ஷங்கருக்காக காத்திருப்பாரா என்பதும் விடை தெரியாத கேள்விகள்தான். ஏன், மீண்டும் சௌந்தர்யாவோ அல்லது ஐஸ்வர்யா தனுஷோ கூட அவரது படத்தை இயக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
ஆனால் இப்போது புதிய செய்தியாக அவர் கன்னடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. கன்னட இயக்குனர் ருஷி என்பவர் இயக்கும் ‘ஒன்வே’ என்ற படத்தில்தான் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம் ரஜினி. இந்தப்படத்தில் ரஜினி நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுவதற்கு காரணம் அவரது பால்யகால நண்பரான ராஜ் பகதூர் இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் என்பதுதான்.
ராஜ்பகதூர் நடிப்பதால் ரஜினியையும் இந்தப்படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்கவைத்து ஒரு சரித்திரப்பெருமையை தட்டிச்செல்ல முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் ருஷி. ராஜ்பகதூர் மூலமாக இதற்கு கோரிக்கை வைத்தால் ரஜினி மறுப்பு சொல்லமாட்டார் என்ற நம்பிக்கையும் இதற்கு ஒரு காரணம். 1981ல் வெளியான ‘கர்ஜனா’ தான் ரஜினி கன்னடத்தில் நேரடியாக நடித்த கடைசிப்படம். கிட்டத்தட்ட 32 வருட இடைவெளிக்குப்பின் தன் தாய்மொழியில் நடிக்க இருக்கும் ரஜினியை கர்நாடாகவில் உள்ள அவரது எண்ணற்ற ரசிகர்கள் ஆவலுடன் வரவேற்க காத்திருக்கிறார்கள்.