உயிர், மிருகம், சிந்துசமவெளி படங்களை இயக்கிய சர்ச்சை இயக்குனர் சாமி அதிலிருந்து வெளிப்படும் விதமாக ‘கங்காரு என்ற படத்தில் அண்ணன் தங்கை பாசப்போராட்டத்தை எடுத்துள்ளார். முதல் முறையாக இந்தப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார் பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ். அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை, கவிப்பேரரசு வைரமுத்துவுக்கான பாராட்டு விழாவாக நடத்திவிட்டார்கள்.
இந்த விழாவில் பேசிய வைரமுத்து,” இந்தப்படத்தின் இயக்குனர் சாமி என்வீடு தேடி வந்து, கடந்த மூன்று படங்களில் உங்களுடன் என்னால் இணைந்து பணிபுரியாமல் போய்விட்டது. காரணம் அந்த படங்களின் பட்ஜெட் ரொம்பவே குறைவு. அதனால் தான் தயங்கியபடி இருந்துவிட்டேன். இந்தப்படத்துக்கு நீங்கள்தான் இசையமைக்கவேண்டும் என்றார். அப்படியானால் இந்தப்படத்தின் பட்ஜெட் அதிகமோ என நான் கேட்க, அவரோ இல்லையில்லை என மறுத்தார்.
இங்கே மூன்றுவிதமான சினிமா எடுக்கப்படுகிறது. அதிக பட்ஜெட், குறைந்த பட்ஜெட், மிகவும் குறைந்த பட்ஜெட் இதுதான் அந்த மூன்றுவிதம். எனக்கு ஒவ்வொரு படத்தின் பட்ஜெட்டைப் பொறுத்தும் எவ்வளவு கேட்கவேண்டும் என தெரியும். இதில் நான் அதிகம் பணியாற்ற விரும்புவது மிகக்குறைந்த பட்ஜெட் படங்களில்தான். எந்த பட்ஜெட் என்றாலும் என் பேனா ஒரே மாதிரித்தான் எழுதும். அதனால் என்னிடம் வர தயக்கம் வேண்டாம்.” என்று தான் பாடல்கள் எழுதுவது குறித்த தன் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கினார் வைரமுத்து.