தான் தயாரித்த எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் நடிகர் ஜெய்க்கு திருப்புமுனையை அளித்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் அதன்பின் வெளியான சில படங்கள் ஜெய்க்கு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. அதனால் இப்போது தான் நடித்துள்ள ராஜாராணி படத்தை மிகவும் எதிர்பார்த்துவருகிறார் ஜெய். காரணம் இந்தப்படத்தை தயாரித்திருப்பதும் ஏ.ஆர்.முருகதாஸ் தான்.
சமீபத்தில் இந்தப்படத்தின் சில காட்சிகளை பார்த்த ஏ.ஆர்.முருகதாஸ் ஜெய்யின் நடிப்பை பார்த்து அசந்துபோய்விட்டாராம். அதைத்தொடர்ந்து “ஜெய் இந்தப்படத்தில் ஏற்றுள்ள கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. ஜெய் தொழில்பக்தியுள்ள ஒரு நடிகர். நிச்சயம் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது” என பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் முருகதாஸ்.
இந்தப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா என பலர் நடித்திருந்தாலும் தன்னை பாராட்டி ஏ.ஆர்.முருகதாஸ் பேசியுள்ளது, ஜெய்யை மகிழ்ச்சிக்கடலில் தள்ளியுள்ளது. ஷங்கரின் பாசறையில் இருந்து வெளிவந்துள்ள அட்லீ இயக்கியுள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டுவிழா வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.விஜயகுமார்