தவறாக வழிகாட்டுகிறதா மோகன்லாலின் படம்.?

128

நாட்டில் நடப்பதைத்தான் சினிமாவில் காட்டுகிறோம் என்கிறார்கள் நம் இயக்குனர்கள்.. ஆனால் சினிமாவைப் பார்த்துத்தான் குற்றவாளிகளாக பலர் உருவாகிறார்கள் என்கிறார்கள் போலீஸார். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கொலை செய்யும் எண்ணம் கொண்டிருந்த ஜெயபிரகாஷ் என்பவனுக்கு, அந்த சமயத்தில் வெளியாகியிருந்த ‘நூறாவது நாள்’ படத்தை பார்த்துவிட்டுத்தான் அதை எப்படி செய்வது, எப்படி போலீஸிடமிருந்து மறைப்பது என்ற எண்ணமே தோன்றியதாக பின்னாளில் அவன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தான்.

இதேபோன்றதொரு சர்ச்சையில் தான் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம்’ படமும் சிக்கியுள்ளது. சமீபத்தில் கேரளாவில் நடந்த நிலாம்பூர் கொலைவழக்கில் கைதான இளைஞர்களை போலீஸார் விசாரித்தபோது ‘த்ரிஷ்யம்’ படம் தான் எங்களுக்கு கொலைசெய்யும் ஊக்கத்தை தந்தது என்று கூறியிருக்கிறார்கள்.

‘த்ரிஷ்யம்’ படத்தில் மோகன்லால் ஒரு கொலையை சாதுர்யமாக மறைக்க முயற்சிகள் செய்வார். இதுமட்டுமல்ல.. சமீபகாலங்களில் வெளியான ‘இடுக்கி கோல்டு’, ‘ஹனி பீ’ ஆகிய படங்களை பார்த்துத்தான் தாங்கள் போதைப்பழக்கத்திற்கு ஆளானதாகவும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதைவிட ஒரு வினோதமான சம்பவம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான ‘டி-டே’ படத்தை பார்த்துவிட்டு, பாட்னாவில் உள்ள பள்ளி மாணவர்கள் மூன்றுபேர், ‘இளங்கன்று பயம் அறியாது’ என்பதைப்போல பிரபல தாதாவான தாவூத் இப்ராஹிமை நங்கள் பிடிக்கிறோம் என வீட்டைவிட்டு கிளம்பி வந்துவிட்டார்கள். அதன்பின் போலீஸார் அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆக, தற்போதைய மாறிவரும் இளைய சமுதாயம் சினிமாவில் இருந்து நல்லவற்றை எடுத்துக்கொள்வதைவிட மோசமானவற்றைத்தான் முதலில் கவனிக்கிறது. சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்கும் மனப்போக்கு மாறிவருவது ஆரோக்கியமான விஷயம் இல்லை.. கதைக்கு சுவராஸ்யம் என்று இயக்குனர்கள் படத்தில் சேர்க்கும் பல விஷயங்கள் நிஜ வாழ்க்கையில் பலரால் பல குற்றங்களுக்காக துணைபோகின்றன. இதற்கான தீர்வு யார் கையில்..?

Leave A Reply

Your email address will not be published.