திருமணம் செய்யப்போகும் இன்றைய இளைஞர்களில் ஒரு சிலர் சந்திக்கும் பிரச்சனைதான் மையக்கரு. பிரசன்னாவுக்கும் லேகா வாஷிங்டனுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் இருவரும் நெருங்கிப் பழகியதில் காதலர்களாகவே மாறிவிடுகிறார்கள்.
ஒருகட்டத்தில் இருவரும் தங்களை மறந்து ‘ஒன்று கூட’ நினைக்கும்போது பிரசன்னாவால் அது ‘முடியாமல்’ போகிறது. திருமணம் நடக்கும் வரை பிரசன்னா சந்திக்கும் அவஸ்தைகளும் தனது பிரச்சனைக்கு தீர்வுகண்டு லேகாவை கைப்பிடித்தாரா என்பதும்தான் மீதிக்கதை.
பிரசன்னா, லேகா நடிப்பில் எந்தக்குறையும் சொல்லமுடியாதபடி சரியாக செய்திருக்கிறார்கள். அதிலும் மாப்பிள்ளைக் கோலத்தில் பிரசன்னா அவ்வளவு அழகு. ஆனால் பிரசன்னா சந்திக்கும் பிரச்சனைக்கு அவர் தீர்வு தேடி அலையும் காட்சிகளின் நீளம்தான் படத்துடன் நம்மை ஒன்ற முடியாமல் செய்துவிடுகிறது.
படத்தின் பெரும்பாலான வசனங்கள் ஆங்கிலத்தில் வருவதும் அதிலும் டபுள் மீனிங்காக இருப்பதும் நம்மை முகம் சுழிக்க வைப்பது உண்மை. கிரேசி மோகன் டாக்டராக சின்ன ரோலில் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார் ‘மெல்ல சிரித்தாள்’, காதல் மறந்தாயடா ஆகிய இரு பாடல்களும் இனிமை. பின்னணி இசையும் நன்றாகவே உள்ளது.
படத்தின் இயக்குனர் பெயரும் பிரசன்னாதான். முதல் படத்திலேயே ஆண்களுக்கு வரும் ஒரு பிரச்சினையை நகைச்சுவையோடு கையாள முயற்சி செய்துள்ளார் இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா. மன அழுத்தம் தான் ஆண்களின் ‘அந்த’ குறிப்பிட்ட பிரச்சனைக்கு காரணம் என அதற்கு தீர்வும் சொல்லிருக்கிறார்.
ஆனால் அதற்கான திரைக்கதையில் தான் ஆங்காங்கே தடுமாறியுள்ளார். இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் நடக்கும் சடங்கு சம்பிரதாயங்கள், பிரசன்னா தன் பிரச்சனையை நிவர்த்தி செய்வதற்காக நடத்தும் நீண்ட தேடல்கள் என இரண்டு மணி நேர படமாக பார்ப்பதற்கு சிரமமாகத்தான் இருக்கிறது.