இந்திரஜித் – விமர்சனம்

162

பலநூறு வருடங்களுக்கு முன் விண்வெளியில் இருந்து கல் ஒன்று பூமியில் விழுந்ததாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானி சச்சின் கண்டேகர்.. அது அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாதிகளின் கைப்பிடியில் சிக்கியுள்ள காட்டுப்பகுதியில் இருப்பதாக ஒரு மேப் மூலம் தெரிய வருகிறது. விஞ்ஞானி தனக்கு துணையாக புத்திசாலி இளைஞனான கௌதம் கார்த்திகையையும் இன்னும் சில இளைஞர்களையும் அழைத்துக்கொண்டு அங்கே புறப்படுகிறார்.

அவர்களை அறியாமலேயே அவர்களை பின் தொடர்ந்து அந்த கல்லை கைப்பற்ற நினைக்கிறார் தொல்லியல் துறை அதிகாரி சுதன்ஷு பாண்டே.. கௌதம் கார்த்திக்கால் தனது திறமையை பயன்படுத்தி அந்த கல்லை கண்டுபிடிக்க முடிந்ததா..? நானூறு வருடங்களுக்கு நோயே வராமல் தடுக்கும் சக்தியுள்ள அந்தக்கல் நல்லவர்களிடம் சிக்கியதா என்பது மீதிக்கதை..

ரசிகர்களுக்கு எப்போதுமே சுவாரஸ்யம் தருபவைதான் சாகச பயணக்கதைகள்.. அதில் பேண்டசி அம்சங்களும் சேர்ந்துகொண்டால் கேட்கவே வேண்டாம். இந்த இரண்டையும் கலந்துகட்டி விறுவிறுப்பான படம் ஒன்றை தந்துள்ளார் இயக்குனர் கலாபிரபு.

தந்தையை போலவே துறுதுறு கேரக்டரில் ஜமாய்க்கிறார் கௌதம் கார்த்திக். மலைமேல் ஏறுவது, சறுக்குவது, மலைப்பகுதியில் ஜீப் ஓட்டுவது என நிறைய சாகசங்கள் செய்திருக்கிறார். அவரது கடின உழைப்புக்கான பாராட்டை நாம் கொடுத்தே ஆகவேண்டும்.

படத்தில் சோனாரிகா, அர்ஷிதா என இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் காதல் காட்சிகள் எதையும் வலிந்து திணிக்காமல் கதையை நகர்த்தி இருக்கிறார்கள். இரண்டாவது நாயகி அர்ஷிதாவாவது படம் முழுக்க கூடவே ட்ராவல் பண்ணுகிறார். ஆனால் கதாநாயகியாக எதிர்பார்க்க வைத்து ஆர்வத்தை கிளப்பிவிட்ட சோனாரிகாவை ஆரம்பத்திலேயே கழட்டிவிட்டது நியாயமா பாஸ்..?

ஆராய்ச்சி அதிகாரிகளாக வரும் சச்சின் கண்டேகர் மற்றும் சுதன்ஷு பாண்டே இருவருமே அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்தி இருக்கிறார்கள். ஆனால் இருவரில் யார் நல்லவர் என்பதை க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்டாக வைத்துள்ளது பெரிய அளவில் ஈர்க்கவில்லை. பூச்சாண்டி காட்டும் உதார் வீரராக எம்.எஸ்.பாஸ்கர் சில இடங்களில் (மட்டுமே) கிச்சுகிச்சு மூட்டுகிறார்.

படத்தின் மிக முக்கிய பலம் ராசாமதியின் ஒளிப்பதிவு.. மலைப்பகுதியில் நாமும் ஒரு சாகச பயணம் சென்றுவந்ததை போன்ற உணர்வு ஏற்படுகிறது. கேபியின் பின்னணி இசை அதிரவைக்கிறது. போரடிக்காத சாகச கதையை எடுத்த கலாபிரபுவின் யோசனை பாராட்டுக்குரியதுதான்.. ஆனால் அதில் மாவோயிஸ்ட்டுகள், யார் சுட்டாலும் ஹீரோவை துளைக்காத குண்டுகள் என சில கிளிஷே காட்சிகளை வேறுவிதமாக மாற்றி இருக்கலாம்.. அதேபோல அந்த விண்கல்லின் முக்கியத்துவத்தை இன்னும் எளிதாக விளக்கி இருந்தால் நம்மால் படத்துடன் இன்னும் இயல்பாக ஒன்ற முடிந்திருக்கும்.

மொத்தத்தில் இந்த இந்திரஜித், ஒரு ஜாலியான சாகச பயணத்திற்கு தான் நம்மை அழைத்து செல்கிறான்.

Comments are closed.