குடும்ப படங்கள் என்றால் என்ன என இன்றைய தலைமுறை கேள்வி கேட்கும் அளவுக்கு, திருவிழா கொண்டாட்டம் போல மன நிறைவை தரும் குடும்ப படங்கள் வருவது குறைந்தே போய்விட்டது. ‘மன்னர் வகையறா’. அந்தக்குறையை போகும் விதமாக வெளியாகியுள்ள படம் என்பதை அழுத்தம் திருத்தமாக பறைசாற்றுகிறது.
பல படங்களில் நாம் பார்த்து ரசித்த கதைக்களம் தான் என்றாலும் ட்ரீட்மெண்ட் இதில் புதுசு.. ஊர் பெரிய மனிதர் பிரபுவின் மகன்கள் கார்த்திக் குமார், விமல்.. ஜெயபிரகாஷ்-சரண்யாவின் மகள்கள் சாந்தினி, ஆனந்தி.. கல்லூரி படிக்கும் ஆனந்தியுடன் வக்கீல் படிப்பு படித்த விமலுக்கு காதல் டெவலப் ஆகிறது. இந்தநிலையில் விமலின் அண்ணன் கார்த்திக் குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சிக்க, அவர் சாந்தினியை காதலித்த விவரமும் அவருக்கு திருமணம் ஆகப்போகும் விவரமும் விமலுக்கு தெரியவருகிறது..
சாந்தினியை, தனது அண்ணன் மகனுக்கு திருமணம் செய்துவைத்து இரு குடும்பத்தின் பல வருட பகையை முடிவுக்கு கொண்டுவர நினைக்கிறார் சரண்யா பொன்வண்ணன்.. ஆனால் திருமணம் மண்டபத்தில் நுழைந்து சாந்தினியை தூக்கிவந்து கார்த்திக்குடன் திருமணம் செய்து வைக்கிறார் விமல்.
இதனால் அவமானத்தில் கொதித்த சாந்தினியின் அண்ணன் வம்சி கிருஷ்ணா, தனது இன்னொரு தங்கை ஆனந்தியை அதே மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து தருவதாக வாக்கு தருகிறார். அதேபோல ஆனந்தியை மறந்துவிடுமாறு விமலிடம் சத்தியம் கேட்கிறார் பிரபு. விமல்-ஆனந்தியை கைப்பிடித்தாரா..? பிரிந்த உறவுகள் ஒன்று கூடியதா..? என்பது மீதிக்கதை.
தனக்கு தோதான ‘ஹைடெக்’ களவாணி கேரக்டரில் அழகாக செட் ஆகியிருக்கும் விமல், காமெடி, ஆக்சன் என இரண்டு ஏரியாவிலும் செமையாக ஸ்கோர் பண்ணுகிறார்.. கூடவே காதல், சென்டிமென்ட் இரண்டிலும் பிரித்து மேய்கிறார்.. நீண்டநாள் கழித்து நடித்தாலும் ஒரு நல்ல படத்தில் தான் நடித்துள்ளார் விமல்..
இதுவரை பார்த்துவந்த ‘கயல்’ ஆனந்தியா இது…? பூபதி பாண்டியன் ஒரு புது ஆனந்தியை நமக்கு காட்டியுள்ளார். விமலுடன் காதல் கலாட்டா பண்ணும் காட்சிகளில் ஆனந்தியின் பெர்பார்மன்ஸ் சான்ஸே இல்லை.. காமெடியில் ரோபோ சங்கரையெல்லாம் ஓவர்டேக் செய்து விடுகிறார்.. ஆனந்திக்காகவே இன்னொரு முறை படம் பார்க்கலாம் போல..
படத்தில் பிரபு, ஜெயபிரகாஷ், வம்சி கிருஷ்ணா, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சாந்தினி, சங்கிலி முருகன், சிங்கம்புலி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் அனைவருக்குமான முக்கியத்துவமும் சரியாக கொடுக்கப்பட்டிருகிறது. அவர்களும் அதை உணர்ந்து தங்களது பங்களிப்பை தந்துள்ளனர். குறிப்பாக சரண்யா-நீலிமா குடும்பத்தாருடன் சேர்ந்து பண்ணும் காமெடி சரியான கலக்கல் ரகம். ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் யோகிபாபுவின் பூச்சி மருந்து காமெடி அதகளம். அட க்ளைமாக்ஸில் அசத்தல் என்ட்ரி கொடுப்பது நம்ம பிக்பாஸ் ஜூலியே தான். ரோபோ சங்கர் தான் காமெடி என்கிற பெயரில் படுத்தி எடுக்கிறார்.
சண்டைகாட்சிகளில் விமலின் கடுமையான உழைப்பு நன்றாகவே தெரிகிறது.. தன்னை துரத்தும் எதிரிகளிடமிருந்து பஸ்ஸ்டாண்டில் விமல் தப்பிக்கும் காட்சி செம கெத்து. பாடல்களும் கலகலப்பாகவே படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பூபதி பாண்டியன் எழுதியுள்ள ‘எங்க அண்ணனை பத்தியும் கவலையில்ல’ பாடல் செம க்யூட் குத்து.
மாஸ் அன்ட் கிளாஸாக கிராமத்து பின்னியில் நல்லதொரு குடும்ப கதையை தந்த இயக்குனர் பூபதி பாண்டியனை தாராளமாக பாராட்டலாம்.