நடிகர்கள் : வெங்கடேஷன், ஜெய், ஸ்ருமிதி, முத்தமிழ், மணி போஸ், சதிஷ் நாகராஜன், ராகேஷ்
இசை : நவின் அண்ணாமலை
ஒளிப்பதிவு : அசோக் சுவாமிநாதன்
இயக்கம் : பிரேம் குமார்
தயாரிப்பு : சதிஷ் நாகராஜன், ஐஸ்வர்யா தியாகராஜன்
உலகில் பிறக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் இறப்பு நிச்சயம். இதை அனைத்து உயிரினங்களும் ஏற்றுக்கொண்டாலும், மனிதன் மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு, மரணத்தை பார்த்து அஞ்சவும் செய்கிறான். அப்படிப்பட்ட மனிதர்களுக்கு மரணம் என்றால் என்ன? என்பதை விளக்குவது தான் ‘டியர் டெத்’.
படத்தில் நான்கு கதைகள் வருகிறது. நான்கு கதைகளிலும் வெவ்வேறான மரணங்கள் நிகழ்கிறது. அந்த மரணங்கள் மனிதர்களை எப்படி பாதிக்கிறது என்பது தான் கதை.
அனைத்து உயிரினங்களும் மரணத்தை ஏற்றுக்கொண்டாலும், மனிதன் ஏற்றுக்கொள்வதில்லை, என்று ஒரு இடத்தில் வசனம் வருகிறது. ஆனால், மனிதர்கள் அனைவருக்கும் பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று நிச்சயம் என்பது தெரிந்த விஷயம் தான். இதை சொல்வதற்கு இந்த நான்கு கதைகள் எதற்கு என்று தான் தெரியவில்லை.
நான்கு கதைகளிலும் நடித்திருக்கும் நடிகர்கள் கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருப்பதோடு இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள்.
மரணம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், மரணம் பற்றி மனிதர்களுக்கு பாடம் எடுக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஏதோ செய்தி வாசிப்பது போல், சில விஷயங்களை அவர் சொல்கிறார். ஆனால், அவர் சொல்வது தான் புரியவில்லை.
வயதான அம்மாவுக்கு சேவை செய்து அவரை பார்த்துக்கொள்ளும் வயது முதிர்ந்தவர் வேடத்தில் நடித்திருக்கும் வெங்கடேஷன், சந்தோஷமாக வாழ்க்கையை துவங்கும் புது தம்பதிகளாக நடித்திருக்கும் ஸ்முருதி, ஜெய் ஆகியோரின் நடிப்பு கச்சிதம்.
நடிகராக அறிமுகாகியுள்ள பாடலாசிரியர் முத்தமிழ், அவரது மனைவியாக நடித்திருக்கும் ஜூவி ஆர்த்தி, சிறுமி சாய் ஜீவிதா ஆகியோரது உணவுப்பூர்வமான நடிப்பு கவர்கிறது.
ஜாலியான நான்கு நண்பர்களின் வாழ்க்கையை சொல்லும் கதையில் நண்பர்களாக நடித்திருக்கும் சதிஷ் நாகராஜன், மணி போஸ், ராகேஷ் கார்த்திக், மிதுன் ருத்ரன் ஆகியோரின் கலகலப்பான வாழ்க்கை ஜாலியாக இருந்தாலும், நண்பரின் இறப்பு கலங்க வைக்கிறது.
அசோக் சுவாமிநாதனின் ஒளிப்பதிவு இயல்பாக இருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் நம்முள் கடத்தும் விதமாக படமாக்கியிருக்கிறார்.
நவின் அண்ணாமலையின் கதையைப் போல் மிக எளிமையாக பயணித்திருந்தாலும், படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் வெங்கடேஷன் நான்கு கதைகளை தொகுத்த விதம் நேர்த்தி.
கதை வசனம் எழுதியிருக்கும் ஸ்ரீதர் வெங்கடேஷன், மரணம் பற்றி நமக்கு புரிய வைப்பதற்காக இந்த கதையை எழுதியிருக்கிறார். அவர் எழுதியிருக்கும் நான்கு கதைகளில் வரும் மரணங்கள் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெளிவாக சொல்லியிருக்கலாம்.
படத்தை இயக்கியிருக்கும் பிரேம் குமார் நான்கு கதைகளுக்கு மரணம் மட்டும் தொடர்பு இன்றி, நான்கு கதைகளில் வரும் கதாபாத்திரங்களையும் தொடர்பு படுத்தியிருப்பது படத்திற்கு சற்று சுவாரஸ்யத்தை கொடுக்கிறது.
ரேட்டிங் 2.5/5