ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிகர்கள், இயக்குனர்களை தாண்டி தயாரிப்பாளர்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகள் நடக்கவே செய்யும். அப்படி ஒரு தயாரிப்பாளர் தான் சி.வி.குமார்.. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதாகட்டும், திறமையான இயக்குனர்களை, நடிகர்களை அறிமுகப்படுத்துவதாகட்டும் சி.வி.குமாரின் கை ராசியான கைதான்..
இந்த ராசியான கைக்கு டைரக்சனில் என்ன அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என தெரிந்துகொள்ள விரும்பினாரோ என்னவோ, திடீரென ‘மாயவன்’ படம் மூலம் இயக்குனராகவும் மாறிவிட்டார்.. இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சந்தீப், ‘மாயவன்’ படத்தில் ஒபந்தம் ஆனபோது சாதாரண ஒரு நடிகர் தான்.. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘மாநகரம்’ அவரது திறமை மீது வெளிச்சம் பாய்ச்சி விட்டது.. அதனால் மாயவனில் சந்தீப் இருப்பது படத்துக்கு டபுள் ப்ளஸ்..
இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் சந்தீப்.. அவருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். தனது ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனில் இருந்து இந்தமுறை ஜிப்ரானுக்கு மாறியுள்ளார் சி.வி.குமார்.. படத்தின் எடிட்டர் வழக்கம் போல லியோ ஜான் பால் தான்.
இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய சி.வி.குமார், ஒரு தயாரிப்பாளரக இருந்ததற்கும் இப்போது இயக்குனராக மாறியுள்ளதற்குமான வித்தியாசத்தை வேடிக்கையாக கூறினார்., “நான் தயாரிப்பாளராக இருந்தபோது, திடீரென பட்ஜெட் எகிறும் செலவு ஏதாவது ஒன்றை இயக்குனர் சொன்னால், மேனேஜரை கூப்பிட்டு அதெல்லாம் முடியாது இருக்குற காசுல எப்படியோ முடிச்சுடுங்கன்னு சொல்லிட்டு கிளம்பிருவேன்..
ஆனா இப்ப நானே ஒரு இயக்குனரா இன்னும் கொஞ்சம் சீன்ல இம்ப்ரூவ் பண்ணலாம்னு நினைச்சு அதுக்கு தேவையானதை கேட்டா, அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசில என்கிட்டதான் வந்து நிக்குறாங்க.. சார் நீங்கதான தயாரிப்பாளர்.. செலவு பண்ணித்தான் ஆகணும்னு சொல்றாங்க.. அதேசமயம் ஒரு இயக்குனரா ஆனதால எதை எதை மிச்சம் பண்ணலாம்னும் தெரிஞ்சுக்கிட்டேன்” என தனது டைரக்சன் அனுபவம் பகிர்ந்துள்ளார் சி.வி.குமார்.

Comments are closed.