பாண்டியநாடு’ படத்தை தயாரித்ததிலும் அதை குறுகிய காலத்தில் படமாக்கி சொன்ன தேதியில் வெளியிட்டதிலும் தன்னை ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் அடையாளப்படுத்தி இருக்கிறார் விஷால். இதோ வெற்றிபெற்ற சூட்டோடு இப்போது அடுத்த தயாரிப்பாக ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை ஆரம்பித்துவிட்டார். தயாரிப்பில் பக்கபலமாக விஷாலுடன் கைகோர்த்திருக்கிறது யுடிவி நிறுவனம்.
‘பாண்டியநாடு’ படத்தின் மூலம் விஷாலின் ராசியான ஜோடியான லட்சுமி மேனன் தான் இந்தப்படத்திலும் கதாநாயகி. இனியா இரண்டாவது கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், சுந்தர் ராமு, ஜெகன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, ‘சமர்’ என விஷாலை வைத்து இரண்டு படங்களை இயக்கிய விஷாலின் ஆஸ்தான இயக்குனரான ‘திரு’ தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார் ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து, 2014 ஏப்ரலில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.