விக்ரமை பொறுத்தவரை ஒரு படத்தில் நடித்து முடிக்கும் வரை அடுத்த படத்தில் கமிட்டாகவே மாட்டார். காரணம் தனது படங்களில் உடல் எடையை கூட்டி, குறைத்து வித்தியாசமான தோற்றங்களில் நடிப்பதால் அந்த ஒரு படத்தில் மட்டுமே அவரது கவனம் இருக்கும். தற்போது ஷங்கர் இயக்கிவரும் ‘ஐ’ படத்தில் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன.
அடுத்ததாக தரணியின் டைரக்ஷனில் ‘ராஸ்கல்’ படத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம். பாலா இயக்கிய ‘சேது’ படம் மூலம்தான் விக்ரமுக்கு தமிழ்சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்றாலும் அதை தக்கவைத்துக்கொண்டு ஒரு விக்ரமை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக வலம் வரச்செய்தவர் இயக்குனர் தரணி. இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்களும் கூட. இவர்கள் இருவரும் இணைந்த ‘தில்’, ‘தூள்’ படங்களின் வெற்றியை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியுமா?
தற்போது ‘ராஸ்கல்’ படத்தில் விக்ரமின் ஜோடியாக நடிக்க த்ரிஷா மற்றும் ஹன்சிகா என இருவரின் பெயர்தான் பரிசீலனையில் இருந்தது. த்ரிஷா ஏற்கனவே விக்ரமுடன் ‘சாமி’, ‘பீமா’ என இரண்டு படங்களிலும், தரணி டைரக்ஷனில் ‘கில்லி’, ‘குருவி’ என இரண்டு படங்களில் நடித்திருப்பதால் வாய்ப்பு அவருக்குத்தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.