திலகர் – விமர்சனம்

139

 

ஒரே ஜாதியில் இருக்கும் இரண்டு தரப்பினருக்கான ‘யார் பெரியவன்’ என்கிற மோதலும் அந்த மோதலின் முடிவு என்ன என்பதும் தான் திலகர் படத்தின் கதை.

மக்களிடம் நல்ல பெயர் பெற்ற போஸ்பாண்டியை பழிதீர்க்க காத்திருக்கிறார் அவரால் செல்லாக்காசாக ஆகிப்போன உக்கிரபாண்டி.. போஸ்பாண்டியோ  தனக்குப்பின் யாரும் அரிவாள் தூக்க கூடாது என்கிற எண்ணத்தில், ஊர் இலவட்டங்களையும் அடக்கிவைத்து, தனது தம்பிகள் இருவரையும் போலீசாகவும், இன்ஜினீயராகவும் ஆக்குவதற்கு படிக்கவைக்கிறார்.

சிறு தகராறில் அவமானப்பட்ட உக்கிரபாண்டியின் மகன்கள் மூவரும் போஸ்பாண்டியை வெட்டி சாய்க்கின்றனர். கோழியை கொள்வதை பார்த்தால் கூட முகத்தை திருப்பிக்கொள்ளும் போஸ்பாண்டியின் தம்பி திலகர் வெகுண்டெழுந்து அண்ணனை கொன்ற மூவரையும் கொடூரமாக பழி தீர்க்கிறார்.

மகன்களை பறிகொடுத்த உக்கிரபாண்டி இன்னும் உக்கிரமாகி, திலகரை தீர்க்க காலநேரம் பார்த்து கண்கொத்தி பாம்பாக காத்திருக்கிறார். காலமும் கனிகிறது. உக்கிரபாண்டியன் வைத்த குறியில் இருந்து திலகர் தப்பினாரா.. இல்லை இந்த பகை முடிவே இல்லாமல் நீள்கிறதா என்பது க்ளைமாக்ஸ்.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்குள் நடக்கும் மோதலை நாம் பல படங்களில் பார்த்திருக்கிறோம்.. ஆனாலும் அதிலிருந்து திலகர்’  கொஞ்சம் வித்தியாசப்படுகிறார். யதார்த்த கிராமத்து மனிதர்களை நம் முன்னே  உலாவவிட்டிருப்பதால் இது படம் என்கிற எண்ணம் மறைந்து கதையுடன் ஒன்ற முடிகிறது.

கதையின் உயிரோட்டத்துக்கு முக்கிய காரணம் இந்த மோதல்களை எல்லாம் ஒழித்து அடுத்த தலைமுறையை கல்வியின் பக்கம் திருப்பிவிட நினைக்கும் போஸ்பாண்டியாக நடித்திருக்கும் கிஷோர், அண்ணனின் மரணத்தால் தனது கொள்கையான அஹிம்சையை தூக்கி வீசிவிட்டு ஆயுதம் ஏந்தும் திலகராக நடித்திருக்கும் துருவா, நீறு பூத்த நெருப்பாக வன்மத்தை வெளிப்படுத்தும் உக்கிரபாண்டியாக நடித்திருக்கும் ‘பூ’ ராமு மூவரும் தான்.

திலகராக நடித்திருக்கும் துருவா, நீண்ட நாளைக்குப்பின் ஒரு நல்ல புதுமுக நடிகர் கிடைத்த மனநிறைவை ஏற்படுத்துகிறார். படத்தில் அவரது மூன்று விதமான தோற்றங்களும் அலட்டல் இல்லாத நடிப்பும் சினிமாவில் அவரை அடுத்தகட்டத்திற்கு வழி நடத்திச்செல்லும் என்பது நிச்சயம்.

துறுதுறு கதாநாயகியாக மிருதுளா பாஸ்கர், தனது காதலில் இருந்து விலகும் காட்சியில் நியாயத்தை வெளிப்படுத்துகிறார். கிஷோரின் மனைவியாக மலையாள திரையுலகில் இருந்து அடியெடுத்து வைத்திருக்கும் அனுமோல் குறைவான வசனம் பேசி, கண்களிலேயே நடிப்பை ஒளிரவிட்டிருக்கிறார்.

தன் அண்ணனை கொன்றவனை திலகர் பழி தீர்க்கும் பத்து நிமிட காட்சி பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. அதேசமயம் அடுத்த தலைமுறை திலகரை கொல்ல ஆயுதம் தூக்கும்போது நமக்கு பகீரென்கிறது. விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியிருக்கும் படத்தின் இயக்குனர் நல்ல செய்தியை சொல்லி க்ளைமாக்சை முடித்தது பாராட்டுக்குரியது தான் என்றாலும் முடித்த விதம் திருப்தியை தரவில்லை என்பதே உண்மை.

Comments are closed.