
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸுடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த ‘ராஜாராணி’, திரைப்படம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நூறாவது நாளை தொட்ட கதையெல்லாம் நமக்கு தெரிந்ததுதான். ஷங்கரின் சிஷ்யரான அட்லீயின் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்துள்ள இந்தப்படம், ஆர்யா நடித்து இதுவரை வந்த படங்களில் பெரிய படம் என்ற பெயரை தட்டிச்சென்றுள்ளதோடு 50கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
நேற்று தெலுங்கிலும் இந்தப்படம் வெளியாகி, ஆந்திர ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இது ஏற்கனவே தெலுங்கு திரையுலக பட அதிபர்களும் வினியோகஸ்தர்களும் கணித்தது தான். இதற்கு காரணம் ‘ராஜா ராணி’ படமாக்கப்பட்ட நேர்த்தியும், குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் வகையில் படமாக்கப்பட்ட விதமும் தான்.
மேலும் இதில் நடித்திருந்த நடிகர்களின் சிறப்பான பங்களிப்பும் ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவான பாடல்களும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்தப்படத்தின் மூலம் தென்னிந்தியாவில் தயாரிப்பாளர்களால் அதிகம் தேடப்படும் இயக்குனராக அட்லீ மாறியுள்ளார் என்பது உண்மை..