விக்ரம்பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தைப் பாராட்டி ஒரு வாழ்த்துக் கடிதத்தையும் வெளியிட்டார்.
ஆனால் ரஜினியின் இந்தப் பாராட்டு பற்றி நகைச்சுவை நடிகர் சூரி பேஸ்புக்கில் கிண்டல் செய்து கருத்து வெளியிட்டதாக தகவல் வெளியானதால் திரையுலகில் ஒரு பரபரப்பு உருவாயிற்று. இதைக் கேள்விப்பட்டு பதறிப்போன சூரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில், “எனது பெயரில் விஷமிகள் சிலர் ஃ‘பேஸ்புக்’ கணக்கு ஆரம்பித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவது தெரிய வந்தது. ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பங்கேற்கும் அளவுக்கு நான் படித்தவன் இல்லை. ஆனால் எனது பெயரில் 3 ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கி, எனக்கு எதிராக செயல்பட்டு, மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். எனவே, எனது பெயரிலான ஃபேஸ்புக் கணக்குகளை முடக்கி வைக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் சூரி.