‘நேசிப்பாயா’ விமர்சனம்

48

நடிகர்கள் : ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், பிரபு, குஷ்பு, ராஜா, கல்கி கோச்சலின்
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு : எரிக் பிரைசன்
இயக்கம் : விஷ்ணு வர்தன்
தயாரிப்பு : எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் – சேவியர் பிரிட்டோ

அறிமுக நாயகன் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘நேசிப்பாயா’ ரசிகர்களின் நெஞ்சங்களை தொடுகிறதா? ஆள விடுங்கப்பா என்று தியேட்டரை விட்டு ஓட வைக்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

நாயகன் ஆகாஷ் முரளி, நாயகி அதிதி ஷங்கரை கண்டதும் காதல் கொள்கிறார். அந்நாள் முதல் அவருக்கு காதல் தொல்லைக் கொடுத்து ஒரு வழியாக தனது காதல் வலையில் விழ வைக்கிறார். காதலர்களுக்கு இடையே திடீரென்று பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட, அதிதி ஷங்கர் போர்ச்சுக்கல் நாட்டில் வேலைக்கு சென்று விடுகிறார். ஆகாஷ் உள்ளூரில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார். இதற்கிடையே, போர்ச்சுக்கல் சென்ற அதிதி ஷங்கர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். தகவல் அறிந்த் ஆகாஷ் முரளி, காதலியை காப்பாற்றுவதற்காக போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்கிறார். அவர் நாயகியை காப்பாற்றினரா?, கொலைக்கான பின்னணி, அதில் நாயகி அதிதி ஷங்கர் சிக்கியது எப்படி? என்பதை காதலும், மோதலும் கலந்து சொல்வது தான் ‘நேசிப்பாயா’.

நாயகிக்கு காதல் தொல்லை கொடுப்பது, நடனம், ஆக்‌ஷன், வயதுக்கு ஏற்ப சுறுசுறுப்பு என தனது முழு திறமையையும் வெளிக்காட்டக்கூடிய வாய்ப்புகள் திரைக்கதையில் இருந்தாலும், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அவற்றை நாயகன் ஆகாஷ் முரளி வெளிக்காட்டவில்லை. அவருக்காகவே எழுதப்பட்ட கதை என்றாலும் நடிப்பு, நடனம் உள்ளிட்ட அனைத்திலும் அவரது தனித்தன்மை எந்த இடத்திலும் வெளிப்படவில்லை. ஆறடி உயரத்தில் ஆக்‌ஷன் நாயகனுக்கான அத்தனை அம்சங்கள் இருந்தாலும் அடுத்த படங்களிலாவது அவர் நாயகனாக மக்களை கவர்கிறாரா? என்று பார்ப்போம்.

நாயகியாக நடித்திருக்கும் அதிதி ஷங்கர் கல்லூரி மாணவி மற்றும் வாழ்க்கையை உணர்ந்த முதிர்ச்சியான பெண் என ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், சில காட்சிகளில் அவரது நடிப்பு எடுபடமால் போவதோடு, பார்வையாளர்களை எரிச்சலடையவும் செய்கிறது.

சரத்குமார், குஷ்பு, ராஜா, பிரபு, கல்கி கோச்சலின் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் எரிக் பிரைசன் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறது. சேசிங் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் ஹாலிவுட் படங்களின் பாணியில் படமாக்கப்பட்டிருக்கிறது.

அழுத்தம் இல்லாத திரைக்கதைக்கு சுவாரஸ்யம் சேர்க்கும் விதமாக காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாலர் ஏ.ஸ்ரீகர்பிரசாத்.

வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்லும் நாயகிக்கு பிரச்சனை, அதில் இருந்து அவரை காப்பாற்றும் நாயகன், என்ற சாதாரண ஒன்லைனை வைத்துக்கொண்டு, அதில் காதல், ஈகோவால் ஏற்படும் பிரிவு, கொஞ்சம் ஆக்‌ஷன், கொஞ்சம் சஸ்பென்ஸ் ஆகியவற்றை கலந்து பிரமாண்டமான கமர்ஷியல் திரைப்படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணு வர்தன்.

ஆகாஷ் முரளி என்பவருக்காக எழுதப்பட்ட கதை, திரைக்கதை என்பதால் படம் எந்தவித சுவாரஸ்யம் இல்லாமல் பயணித்தாலும், இப்படிப்பட்ட கதையை இவ்வளவு பிரமாண்டமாக எடுத்திருப்பது பார்வையாளர்களை வியக்க வைக்கிறது.

ரேட்டிங் 2.5/5

Comments are closed.