கள்ளப்படம் – விமர்சனம்

140

 

சினிமாவுக்குள் சினிமாவை பின்னணியாக கொண்ட கதைக்களத்தில் படம் எடுத்தால் அது வெற்றி பெறாது என்பது தான் தமிழ்சினிமாவின் நியதி.. ஒரு சில படங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.. கடந்தவருடம் வெளியான ‘ஜிகர்தண்டா’ கூட சினிமா பின்னணியில் வெளியாகி வெற்றிபெற்ற கதை தான். ஒரு உதவி இயக்குனர் ரவுடியை பற்றி படம் எடுக்க வந்து இறுதியில் இயக்குனராக மட்டுமல்ல, சினிமா தாதாவாகவும் மாறிப்போவார்.

கள்ளப்படம் கதையும் சற்றேறக்குறைய இதே சினிமா பாணி கதை தான் என்றாலும் சினிமாவில் முன்னுக்கு வரத்துடிக்கும் உதவி இயக்குனரின் இன்னொரு கோணத்தை காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் வடிவேல்.ஆனால்  ‘நீ விரும்பிய படத்தை இயக்க தயாரிப்பாளர்கள் முன் வரவில்லையா, தைரியமாக கொள்ளையடித்து அந்த பணத்தில் படம் எடு’ என்கிற (தவறான) கருத்தை பதிவு செய்திருக்கிறாரோ என்கிற ஐயமும் எழாமல் இல்லை.

அதேசமயம் வழக்கமாக வரும் படங்களில் இருந்து மாறுபட்டு, அறிமுக இயக்குனர்களில் தனித்து தெரியவேண்டும் என்கிற உத்தியை படம் ஆரம்பித்ததில் இருந்து பின்பற்ற முயற்சித்திருப்பது நன்றாகவே தெரிகிறது. அதன் ஒரு படியாகத்தான் இந்தப்படத்தின் இயக்குநர் வடிவேல், ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், இசையமைப்பாளர் கே, எடிட்டர் காகின். இந்த நால்வரும் தாங்களே படத்தில் முக்கிய பாத்திரங்களையும் ஏற்று நடித்திருப்பது.

இந்த கதையோட்டத்தில் இவர்கள் நால்வரும் அன்னியப்பட்டு தெரியவே இல்லை. காரணம் கதாபாத்திரங்களாகவே அவர்கள் திரையிலும் அதற்கு வெளியிலும் உலாவந்திருப்பது நன்கு பளிச்சிடுகிறது. தனக்கு வாய்ப்பு தர மறுத்த, தனது கதையை அலட்சியமாக பேசிய ஆடுகளம் நரேன் வீட்டிலேயே இந்த நால்வர் அணி கோடிகளை கொள்ளையடிக்க முயற்சிப்பதும், இன்னொரு பக்கம் நரேனின் ‘கீப்’பான லட்சுமி பிரியா தனது காதலனுடன் சேர்ந்து அதே பணத்தை அதே நாளில் கொள்ளையடிக்க முயற்சி செய்வதும் என இரண்டிற்கும் ஒரு லிங்க் கொடுத்திருப்பதில் சுவராஸ்யம் கூட்டுகிறார் இயக்குனர்.

என்னதான் சினிமாவுக்கு தயாராகும் தீவிரத்துடன் கொள்ளையடிக்கவும் தயாரானாலும் அதிலும் சில இடங்களில் ஓட்டைவிடத்தான் செய்திருக்கிறார்கள். அவ்வளவு புத்திசாலித்தனமாக திட்டம் போட்டு திருடியவர்கள், திருடிய இடத்தில் தவறவிட்ட பென் ட்ரைவை எடுக்க பட்டப்பகலிலேயே, அதுவும் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் நேரத்திலேயா வருவார்கள்..? இப்படி ஆங்காங்கே சின்னச்சின்ன சறுக்கல்கள் இருந்தாலும் தீட்டிய திட்டத்தை செயல்படுத்தும் காட்சிகளில் நம்மை பதைபதைக்க வைத்திருப்பது உண்மை. (திருடும் காட்சிகள் பிருத்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘சப்தமஸ்ரீ தஸ்கரா ’படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை அப்படியே பிரதிபலிக்கிறது)

சிங்கம்புலி, சில காட்சிகளில் மட்டுமே வரும் செந்தில், தயாரிப்பாளரக வரும் ஆடுகளம் நரேன், போலீஸ் அதிகாரியாக வரும் கவிதாபாரதி அனைவருமே பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம் இது ‘சினிமா’த்தனமான கதை என்பதை காட்சிக்கு காட்சி பதியவைத்துக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக கதாநாயகி லட்சுமிபிரியா அதிகம் பேசாத அலட்டல் இல்லாத நடிப்பில் ஆச்சர்யப்படவைக்கிறார். நடிக்க வந்துவிட்டாலும் தங்களது ஏரியாக்களில் எந்த குறைபாடும் வந்துவிடாமல் பார்த்துக்கொண்டிருகிறார்கள் எடிட்டர் காக்கின், இசையமைப்பாளர் கே மற்றும் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ்.

படம் முடிந்ததும் நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. படம் எடுக்கவேண்டும் என நேர்மையாக போராடும் ஒரு உதவி இயக்குனர், கொள்ளையடித்து படம் எடுக்கலாம் என்கிற புதிய உத்தியை காட்டுகிறதா இந்தப்படம்..? அப்படி கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடுத்தாலும் திருடிய குற்றத்திற்கான தார்மீக தண்டனை எதுவும் அவருக்கு கிடையாதா..? படத்தின் கதைக்குள் கமர்ஷியல் வட்டத்திற்குள் வராமல் தனது ஆதர்ச சினிமாவை படமாக்க போராடும் இயக்குனர் வடிவேல், ஒரு கமர்ஷியலான படமாக கள்ளப்படத்தை எடுத்திருகிறார் என்றால் அவரின் உண்மையான முகம் என்ன?

இந்த கேள்விகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால் ‘கள்ளப்படம்’ ஒரு சுவராஸ்யமான படமே.

 

Comments are closed.