நடிகர்கள் : ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், சாய் குமார், நக்ஷத்ரா, அஜய் கோஷ்
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : விஷ்ணு சர்மா
இயக்கம் : சிவா நிர்வாணா
தயாரிப்பு : மைத்ரி மூவி மேக்கர்ஸ் – நவீன் எர்னேனி, ஒய்.ரவி சங்கர்
விவசாயியான ரவி தேஜா, மனைவி பிரியா பவானி சங்கர், மகள் நக்ஷத்ரா உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு வேண்டுக்கொண்ட பிறகு பிறந்த குழந்தை என்பதால் மகள் மீது அதிகமான அன்போடும், ஐயப்பன் கடவுள் மீது அதிகமான பக்தியும் கொண்டிருக்கும் ரவி தேஜா, அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் கொண்டவராகவும் இருக்கிறார். இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் சபரி மலைக்கு மாலைப் போட்டு கடுமையாக விரதமும் இருந்து வருகிறார்.
இதற்கிடையே, பள்ளி மாணவி ஒருவர் மர்மமான முறையில் இறப்பதோடு, ஆசிரியை சுவாசிகா, சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவிகள் சிலரை தன் வீட்டுக்கு அழைத்து அவர்களை மிரட்டுகிறார். இந்த விசயம் குறித்து ரவி தேஜாவின் மகளுக்கு தெரிய வர, தன் தந்தையிடம் விசயத்தை சொல்லி மாணவிகளை காப்பாற்ற நினைக்கிறார். ஆனால், ரவி தேவாவின் மது பழக்கத்தாலும், ஐயப்பன் மீதான பக்தியாலும் இந்த விசயத்தைப் பற்றி அவரால் அறிந்துக் கொள்ள முடியவில்லை. இதனால், சம்மந்தப்பட்ட மாணவிகளுக்கு மட்டும் அல்ல, இதில் சம்மந்தம் இல்லாத அவரது மகளும் பிரச்சனையில் சிக்க, அதில் இருந்து அவரை காப்பாற்றினாரா ?, இதன் பின்னணி என்ன ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
மாஸ் மகாராஜா என்ற பட்டப் பெயருடன் வலம் வரும் ரவி தேஜா, இதில் தனது மாஸை குறைத்துக் கொண்டு கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மகள் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் கிளாஸாக நடித்திருக்கும் ரவி தேஜா, பெண் பிள்ளைகள் அனைவரையும் தன் மகள்களாக பார்ப்பது தனது மோசமான பலவீனம், என்று கூறி அவர்களது பிரச்சனையை தீர்க்கும் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கிறார்.
ரவி தேஜாவின் மனைவியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், மகளாக நடித்திருக்கும் சிறுமி நக்ஷத்ரா இருவரும் தங்களது நடிப்பின் மூலம் பார்வையாளர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார்கள். குறிப்பாக சிறுமி நக்ஷத்ரா தனது பார்வையின் மூலமாகவே பலவித உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
சாய் குமார், அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, சுவாசிகா, மீசாலா லக்ஷ்மண், ராஜ்குமார் காசிரெட்டி, கிஷோர் கசிரப்பளம், கார்த்திக் அடுசுமல்லி, மகேஷ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களின் திரை இருப்பு திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா, கிரைம் திரில்லர், அப்பா – மகள் செண்டிமெண்ட் மற்றும் மாஸ் என மூன்று விதமான பரிணாமங்களை தனது கேமரா மூலம் பார்வையாளர்களிடம் கச்சிதமாக கடத்தியிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் டப்பிங் படம் போல் அல்லாமல் ஒரிஜினல் படம் போல் அமைந்திருக்கிறது. பின்னணி இசை மகள் மீது அப்பாவுக்கு இருக்கும் அன்பையும், அது தொடர்பான காட்சிகளையும் கண் கலங்க வைக்கும் விதத்தில் பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கிறது.
அமைதியான குடும்ப நாடகம், திரில்லர், மாஸ், கமர்ஷியல் மற்றும் சமூகத்திற்கான அறிவுரை என திரைக்கதையில் இருக்கும் பல்வேறு அம்சங்கள் அனைத்தும் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் படத்தொகுப்பாளர் பிரவீன் பவுடி, காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
எளிமையான கதையை மிக வலிமையாக சொல்லியிருக்கும் இயக்குநர் சிவா நிர்வாணா, மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு அவரது ரசிகர்களை திருப்திப்படுத்துவதோடு, கதையின் போக்கை மாற்றாமல் அதில் சொல்லியிருக்கும் பலம் வாய்ந்த மெசஜை பார்வையாளர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறார்.
கதையின் துவக்கத்தில் இருந்தே பயணிக்கும் அப்பா – மகள் செண்டிமெண்ட் மற்றும் மாணவிகளின் பிரச்சனைகள் திரைக்கதையை சுவாரஸ்யமாகவும், அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்போடும் நகர்த்திச் செல்கிறது. இரண்டாம் பாதியில் வரும் எதிர்பார்க்காத திருப்பம் பார்வையாளர்களின் இதயங்களை கனக்கச் செய்து, படத்தின் இறுதி வரை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது.
மது பழக்கத்திற்கு அடிமையானவர்களின் இழப்பு மற்றும் ஆன்மீகம் என்ற பெயரில் மக்களால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கையால் ஏற்படும் விளைவுகள் பற்றி மேலோட்டமாக பேசியிருக்கும் இயக்குநர் சிவா நிர்வாணா, அப்பா – மகள் செண்டிமெண்ட் கெமிஸ்ட்ரியை மிக நேர்த்தியாக கையாண்டு ஒட்டு மொத்த ரசிகர்களை ரசிக்க வைத்து கண் கலங்கவும் வைத்து விடுகிறார்.
ரேட்டிங் 4 /5
Comments are closed.