கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ரமணா’. தற்போது மீண்டும் இந்தப்படத்தை இந்தியிலும் ‘கப்பார்’ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள் என்பது சில மாதங்களுக்கு முன்பே தெரிந்த செய்திதான்.. சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இந்த படத்தில் அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்க, தமிழில் ‘வானம்’ படத்தை இயக்கிய கிரிஷ் தான், இந்தியில் இந்தப்படத்தை இயக்குகிறார்.
ரமணாவில் சிம்ரன் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில், ‘அமலாபால் நடிக்கிறார் என ஒரு பேச்சு நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருந்தது. இந்த கேரக்டரில் நடிக்க ஒரு தென்னிந்திய முகம்தான் தேவை என்பதால் அமாலாபால் நடிப்பதாக இருந்தது.
ஆனால் தற்போது இந்தி மார்க்கெட்டை நிலவரத்தையும் கணக்கில் கொண்டு, அதேசமயம் தென்னிந்திய முகமாகவும் இருப்பதால் தற்போது ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஆனால் ஸ்ருதி இதுபற்றி மீடியாக்களிடம் இன்னும் வாய் திறக்கவில்லை. தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து அவர்களே அறிவிக்கட்டும் என அமைதியாக இருக்கிறார்.