தமிழ் மூதாட்டி ஔவையார் ‘அறம் செய்ய விரும்பு’ என்றார். நமது இயக்குனர் சுசீந்திரனோ அதையே ‘அறம் செய்து பழகு’ என சற்று மாற்றி தனது அடுத்த படத்திற்கு டைட்டிலாக வைத்துவிட்டார். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்தப்படத்தின் டைட்டிலை இன்று ஜெயம் ரவி தனது ட்விட்டர் மூலம் வெளியிட்டும் விட்டார்.
பாண்டியநாடு படத்தில் விக்ராந்திற்கு கவனிக்கத்தக்க கேரக்டர் கொடுத்த இயக்குனர் சுசீந்திரன் இந்தப்படத்தில் அவரை இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக ஆக்கியுள்ளார்.. இன்னொரு கதாநாயகனாக சந்தீப் நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதில் சந்தீப்க்கு ஜோடியாக ‘கிருஷ்ணகாடி வீர பிரேமாகாதா’ என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹ்ரீன் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
அதுமட்டுமல்ல ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான ஜே.லஷ்மண் இந்தப்படத்தின் மூலமாக மீண்டும் இயக்குநர் சுசீந்திரனுடன் இணைந்துள்ளார். முதன்முறையாக சண்டை பயிற்சியாளர் அன்பறிவ் சுசீந்திரனுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். சுசீந்திரனுடன் நல்ல நட்புறவில் இருக்கும் டி.இமான் தான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். வரும் ஜூன் மாதம் இந்தப்படம் திரைக்கு வர இருக்கிறது.

Comments are closed.