இளங்கன்று பயமறியாது என்பது அனிருத் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஆல்பத்தில் பெண்களை மிகவும் தரக்குறைவான வரிகளில் சித்தரித்திருந்ததாக கூறி கமிஷனரிடம் புகார் பறக்க, அதன்பின் அந்த வீடியோ நீக்கப்பட்டதுடன் அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்தர் மூலமாக அந்த பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டது.
இந்த பிரச்சனைக்கு சில நாட்களுக்கு முன்புதான், தயாரிப்பாளர் அருண் மணியன் என்பவர் தனது ‘வாயை மூடி பேசவும்’ படத்திற்கு இசையைமைக்க முன்பணம் வாங்கிய அனிருத், படத்துக்கு இசையமைத்து தராததால் அவர்மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்திருந்தார்.
அதை தொடர்ந்து தற்போது அனிருத், தயாரிப்பாளர் வருண்மணியிடம் மன்னிப்பு கேட்டதுடன், தான் வாங்கிய முன்பணத்தை திருப்பித் தந்து விடுவதாகவும் தன்மேல் உள்ள புகாரை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதன்மூலம் இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வளர்ந்துவரும் இசையமைப்பாளரான அனிருத் சினிமாவில் இன்னும் சாதிக்கவேண்டியது எவ்வளவோ இருக்கிறது. இப்போதே இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது அவரது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என அவரது நலம் விரும்பிகள் அவருக்கு எடுத்துக் கூறியுள்ளனராம்.