’அநீதி’ விமர்சனம்

92

நடிகர்கள் : அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், ஜே.எஸ்.கே.சதீஷ், பரணி, சாரா, சாந்தா தனஜெயன், வனிதா விஜயகுமார், அர்ஜுன் சிதம்பரம்
இசை : ஜிவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : எட்வின் சாகே
இயக்கம் : வசந்தபாலன்
தயாரிப்பு : அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘அநீதி’ திரைப்படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.

உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வரும் அர்ஜுன் தாஸ், நண்பர்களுடன் பேச்சுலர் அறையில் தங்குகிறார். உறவு என்று யாரும் இல்லாத அவர் எப்போதும் இருக்கமாகவும், அமைதியாகவும் இருப்பதோடு, மனரீதியாக பாதிக்கப்பட்டவர் போல் அடிக்கடி நடந்துக்கொள்கிறார். இதற்கிடையே தனது மன பாதிப்புக்காக மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வரும் அர்ஜுன் தாஸ், நாயகி துஷாரா விஜயனை காதலிக்க தொடங்கிய உடன், சகஜ நிலைக்கு திரும்புவதோடு, சிரிக்கவும் தொடங்குகிறார். இதற்கிடையே, ஒரு குற்ற சம்பவத்தில் துஷாரா விஜயன் சிக்கிக்கொள்ள, அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் அர்ஜுன் தாஸுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்படுகிறது. அது என்ன? அதனால் அவரது வாழ்க்கை என்ன ஆனது? என்பது தான் ‘அநீதி’ படத்தின் மீதிக்கதை.

முரத்தனமான தோற்றம், கம்பீரமான குரல் கொண்ட அர்ஜுன் தாஸ், ஹீரோவாக நடித்திருக்கும் முதல் படம். முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருப்பவர், பலவித உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தியிருக்கிறார். சிறுவயதில் தான் எதிர்கொண்ட கசப்பான சம்பவத்தை நினைத்து ஆக்ரோசமாவதும் சரி, தனது அப்பாவை நினைத்து அழும் காட்சிகளிலும் சரி, ரசிகர்களையும் கண்கலங்க வைக்கும் விதத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், காதல் மலர்ந்தவுடன் தனது உடலில் மட்டும் இன்றி உள்ளத்திலும் ஏற்படும் மாற்றத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், பக்கத்து வீட்டு பெண் போல மிக சாதாரணமாக இருப்பதோடு, இயல்பாக நடித்து கவர்கிறார்.

அர்ஜுன் சிதம்பரம், ஜே.எஸ்.கே.சதீஷ், சாந்தா தனஜெயன், வனிதா விஜயகுமார் என்று மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

எட்வின் சாகேவின் ஒளிப்பதிவு கதாபாத்திரங்களின் உணர்வை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

எளியவர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி சம்பவங்களை பதிவு செய்திருக்கும் இயக்குநர் வசந்தபாலன், அர்ஜுன் தாஸின் சிறுவயது கதை மூலம் ஒட்டு மொத்த திரையரங்கையே கண் கலங்க வைத்துவிடுகிறார்.

உணவு டெலிவரி செய்யும் உழைப்பாளிகளின் சோகமான பின்னணியை சொல்லும் விதமான காட்சிகளுடன், சாதாரண மனிதர்களை சட்டம் எப்படி பார்க்கிறது, என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் வசந்தபாலன், சமூக அக்கறை கொண்ட படத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் கமர்ஷியலாகவும் இயக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.