நடிகர்கள் : ஜான் ஆபிரகாம், ஷர்வாரி, தமன்னா
இசை : அமால் மாலிக், மனன் பரத்வாய், யுவராகவ் – அர்ஜுன்
ஒளிப்பதிவு : மலாய் பிரகாஷ்
இயக்கம் : நிகில் அத்வானி
தயாரிப்பு : உமேஷ் கே.ஆர்.பன்சால், மோனிஷா அத்வானி, மது போஜ்வாணி, ஜான் ஆபிரகாம்
ஷர்வாரி, ஜான் ஆபிரகாம், தமன்னா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இந்தி திரைப்படமான ‘வேதா’ தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. சாதீய வன்கொடுமைகள் பற்றி பேசும் இப்படம், மனதை தொடுகிறதா? அல்ல ரசிகர்களை விட்டு விலகியிருக்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.
வட இந்தியாவில் உள்ள சுமார் ஐம்பது கிராமங்கள் கொண்ட பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தாங்கள் வைத்ததே சட்டம் என்று அந்த கிராமத்து மக்களை அடக்கி ஆள்கிறது. அதில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் குத்துச்சனடை கற்றுக்கொள்ள விரும்புகிறாள். அதனால், அவர் அவமானப்படுத்தப்படுவதோடு, உயர் சாதி பெண்ணை காதலித்ததால் அவளது சகோதரனை அவள் கண் முன் கொடூரமாக கொலை செய்கிறார்கள். அந்த பெண்ணையும், அவளது தங்கையையும் கொலை கும்பல் வெறியோடு துரத்துகிறது. அப்போது அந்த பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் முன்னாள் ராணுவ வீரர் ஜான் ஆபிரகாம். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை அதிரடியாக சொல்வது தான் ‘வேதா’.
நவீன அறிவியல் காலத்திலும், சாதீய அடக்குமுறை எப்படி எல்லாம் மக்களை ஆட்டுவிக்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் அசீம் ஆரோராவின் கதையை இயக்குநர் நிகில் அத்வானி, நம் ஆழ்மனதுக்குள் பதிய வைக்கும் விதத்தில் காட்சிப்படுத்தி இயக்கியிருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருக்கும் ஷர்வாரி, ஆதங்கம், ஆர்வம், அதிர்ச்சி, போராட்டம் என்று அனைத்து உணர்வுகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
அநீதியை கண்டு வெகுண்டெழும் முன்னாள் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கும் ஜான் ஆபிரகாம், ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டினாலும், நடிப்பில் நிதானத்தை காட்டி சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஜான் ஆபிரகாமின் காதலியாக வரும் தமன்னா காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார்.
மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அளவான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார்கள்.
ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டுமே படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
தற்போதும் நாடு முழுவதும் நடக்கும் சாதீய கொடுமைகளை நம் கண்முன் காட்டும் விதத்தில் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் நிகில் அத்வானி, எளிதியில் கடந்து செல்லக்கூடிய ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக அல்லாமல் அனைத்து மக்களும் அவசியம் பார்க்க வேண்டிய மிக முக்கியமான படைப்பாக கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5