இந்தியாவில் நாசகாரவேலையை நடத்த நினைக்கும் தீவிரவாதிகளின் திட்டத்தை கடைசி நிமிடத்தில் முறியடிக்கப்படுகிறது. இதற்கு காரணம் லண்டனில் உள்ள அனுஹாசனின் கணவர் தான் என தெரியவந்து அனுவின் கண்முன்னே அவரை கொன்று, அவர்களது குழந்தையையும் கடத்தி செல்கிறது.
ஆனால் பின்னர்தான், தாங்கள் கொன்றது தவறான ஆளை என்றும், கொல்லப்படவேண்டியவர் அனுஹாசன் தான் என்றும் அந்த கும்பலுக்கு தெரியவருகிறது. அவர்களிடம் இருந்து தனது குழந்தையை மீட்க போராடுவதுடன் அவர்களையும் கூண்டோடு ஒழித்துக்கட்ட களமிறங்குகிறார் அனுஹாசன்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை ஏற்று கிட்டத்தட்ட படம் முழுக்க விஜயசாந்தி போல் துணிச்சலுடன் நடித்திருக்கிறார் அனுஹாசன்.. ஆனால், காட்சிகள் வலுவாக இல்லாததால் இவரின் நடிப்பு பெரியதாக எடுபடவில்லை. நாசர் வழக்கம் போல என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பேன் என நிரூபித்துள்ளார்.
லண்டனில் பல காட்சிகள் படமாக்கி இருக்கிறார்கள்… லொக்கேசன்கள் சிறப்பாக இருக்கிறது என்றாலும் பல காட்சிகள் ரசிக்கமுடிகிறதே தவிர மனதில் நிற்கவில்லை. டேட்டா பேஸ் மேனேஜ்மண்ட், சாட்டிலைட் கம்யூனிகேஷன், ஃபேஸ் ரிககனிஷன் என லேட்டஸ்ட் டெக்னாலஜியை வைத்து மாயாஜாலம் காட்டியுள்ளார்கள்.
இராணுவத்தில் இந்தியாவிற்காக போராடுபவர்கள் ஆண்கள் மட்டுமில்லாமல், போராடும் குணம் உள்ள பெண்களும் இருக்கிறார்கள் என்று உனர்த்தும் விதமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் நந்தா. கதையில் தேவைக்கு அதிகமாகவே ட்விஸ்ட்டுகளை வைத்து பரபரப்பை ஏற்படுத்த முயன்றிருக்கிறார். ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட நம்ம ஊர்ப்படம் என்கிற பிரமிப்பை ஏற்படுத்த முடிவுசெய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார் என்றே சொல்லலாம்.