நடிகர்கள் : ஒய்.ஜி.மகேந்திரா, சுஹாசினி மணிரத்னம், ராஜ் ஐயப்பா, ரம்யா பாண்டியன், சத்யராஜ், தலைவாசல் விஜய், சமுத்திரக்கனி, மதுவந்தி
இசை : தேவா
ஒளிப்பதிவு : சஞ்சய் பி.எல்
இயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்பு : அருண் விஷுவல்ஸ் – ஆர்.அருண்
’சங்கராபரணம்’, ‘சிந்துபைரவி’ வரிசையில் கர்நாடக இசை மற்றும் இசைக்கலைஞரின் வாழ்வியலையும், வலியையும் சொல்லும் ‘சாருகேசி’ ராகத்தை போல் மனதை இலகுவாக்கிறதா ?, விமர்சனத்தை பார்ப்போம்.
புகழ் பெற்ற கர்நாடக சங்கீத பாடகரான ஒய்.ஜி.மகேந்திரா, இசையையும், தனது மனைவி சுஹாசினியையும் இரண்டு கண்களாக பாவித்து வாழ்கிறார். இசையுலகில் பல சாதனைகளை நிகழ்த்தி பேர், புகழ், பணம் என்று உச்சத்தை தொட்டாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை வலி மிகுந்ததாக இருக்கிறது. அதற்கு காரணம் அவரது ஒரே மகன் ராஜ் ஐயப்பன். தந்தையின் அடையாளம் இல்லாமல் தனது தனித்துவமான அடையாளத்தோடு வாழ விரும்பும் அவர், தந்தையை வெறுப்பதோடு, தாய், தந்தைக்கு தெரியாமல் தன் காதலி ரம்யா பாண்டியனை திருமணம் செய்து கொள்கிறார்.
தங்களுக்கு தெரியாமல் நடந்த திருமணமாக இருந்தாலும், ரம்யா பாண்டியனை மருமகளாக ஏற்றுக் கொள்ளும் ஒய்.ஜி.மகேந்திரா – சுஹாசினி தம்பதி அதிர்ச்சியாகும் விதத்தில், அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஒன்றை ரம்யா பாண்டியன் சொல்லி மிரட்ட செய்வதோடு, அவர்களை பழிவாங்கும் தனது நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்.
ஏற்கனவே மகனின் செயலால் வேதனையோடு வாழும் ஒய்.ஜி.மகேந்திரா, திடீர் மருமகளின் இந்த பழி வாங்கும் நோக்கத்தால் என்ன ஆனார் ?, அந்த ரகசியம் என்ன ?, என்பதை ஒரு புகழ் பெற்ற மனிதரின் வலி மிகுந்த வாழ்க்கையாகவும், அனைத்தும் கடந்து போகும் என்ற வாழ்க்கை தத்துவமாகவும் சொல்வதே ‘சாருகேசி’.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரா, சாருகேசி என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். வெற்றியின் உச்சத்தை தொட்ட சங்கீத சாம்ராட் என்ற அடையாளத்தோடும், மகனால் அவமதிக்கப்படும் ஒரு சாதாரண தந்தை, என்ற இரண்டு விதமான பரிமாணங்களை தன் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சாருகேசியின் மனைவி பத்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஹாசினி, தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். அவரது திரை இருப்பு மற்றும் முதிர்ச்சியான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
சாருகேசியின் மகனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன் மற்றும் மருமகளாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியன், இருவரும் வயதுக்கு ஏற்ற துள்ளலோடு நடிப்பில் மிளிர்கிறார்கள். இருவரும் சாருகேசியை எதிரி போல் பாவித்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவர்கள் மீது கோபம் ஏற்பட வைக்கிறது.
சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், தீனா ரித்விக், ப்ரீதிகா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சஞ்சய்.பி.எல் கேமராவை ஒரு இடத்தில் வைத்து விட்டால், மறுநாள் தான் வேறு இடத்திற்கு மாற்றுவார் போலிருக்கிறது. அந்த அளவுக்கு காட்சிகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மட்டுமே பயணிக்கிறது. வசனங்கள் அதிகம் என்பதால், சஞ்சய்க்கு பணிச்சுமையும் குறைவாகவே இருந்திருக்கும் என்பது திரையில் தெரிகிறது.
இசையமைப்பாளர் தேவா, கர்நாடக சங்கீத இசையில் மிரட்டியிருக்கிறார். தன் தேனிசை மூலம் மெலோடி பாடல்களை திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக கொடுத்தாலும், அதில் தனது பழைய பாடல்களின் இசையை ஒலிக்க செய்து பழைய நினைவுகளை தட்டி எழுப்பியிருக்கிறார். பின்னணி இசை அளவு.
சாருகேசி என்ற மனிதரின் வாழ்க்கை புத்தகத்தை படித்தது போன்ற ஒரு உணர்வை தரும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட்.
பா.விஜயின் பாடல்களும், வசனமும் தூணாக நின்று படத்தை தாங்கியிருக்கிறது.
சாருகேசி என்ற இசைக்கலைஞரின் நேர்மையான வாழ்க்கையை தன் கதை மூலம் நேர்மையாக கையாண்டிருக்கிறார் வெங்கட்.
திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் சுரேஷ் கிருஷ்ணா, மக்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அளிக்கும் ஒரு படைப்பாக சாருகேசியை படைத்திருக்கிறார்.
மேடை நாடகம் திரைப்படம் ஆகும்போது, மேடையில் செய்ய முடியாத பல மாயாஜாலங்களை திரையில் செய்ய முடியும் என்றாலும் அதை தவிர்த்துவிட்டு, சாருகேசி என்ற மனிதரையும், அவர் எதிர்கொள்ளும் வலி மற்றும் சோதனைகளை கடந்து நிகழ்த்தும் சாதனையை பார்வையாளர்கள் மனதில் பதிய வைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.
ரேட்டிங் 3/5