போலீஸில் சிக்கிய தனது தம்பியை மீட்பதற்காக தலக்கோணம் பகுதிக்கு என்.எஸ்.எஸ் முகாமிற்கு வரும் கல்லூரி மாணவர்களில் ஜித்தேஷ், ரியாவை பிணைக்கைதிகளாக கடத்துகிறான் தீவிரவாதி ஜிந்தா. இதில் ரியா மந்திரி கோட்டா சீனிவாசராவின் மகள்..
ஆனால் மந்திரியோ தன் மகள் தீவிரவாதிகளிடம் சிக்கியதற்கு சந்தோஷப்படுகிறார்.. இந்த நிலையில் பெரோஸ்கான் தலைமையிலான அதிரடிப்படை காட்டுக்குள் புகுந்து ஜிந்தாவுடன் மோத, ரியாவும் ஜித்தேஷும் அந்த சமயத்தில் தப்பிக்கிறார்கள். ஜிந்தாவும் தன் ஆட்கள் சிலருடன் தப்பிக்கிறான்.
இதையறிந்த மந்திரி அதிரடிப்படை டீமில் இருக்கும் தன் ஆள் ஒருவர் மூலமாக, காட்டில் தப்பித்து சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகளை கொல்ல உத்தரவிடுகிறார். இது போதாதென்று அடியாட்கள் குரூப்பையும் அனுப்புகிறார்.. மந்திரியே தன் மகளை கொல்லத்துடிக்கும் அவசியம் என்ன? தீவிரவாதி மற்றும் தன் தந்தையின் ஆட்களிடம் இருந்து மகள் தப்பினாரா? என்பது க்ளைமாக்ஸ்..
தலக்கோணம் என பெயர் வைத்ததாலோ என்னவோ படம் முழுவதும் காட்டுப்பகுதியிலேயே நகர்கிறது.. அதிரடிப்படை, தீவிரவாதிகள் தேடல் என சீரியஸாக படம் நகர்வதால் ஜித்தேஷ், ரியா காதல் காட்சிகள் மனதில் ஓட்ட மறுக்கின்றன. க்ளைமாக்ஸ் போர்ஷனில் மட்டுமே இருவரும் கொஞ்சம் சுதாரிக்கிறார்கள்..
படத்தின் உண்மையான நாயகன் என்று பார்த்தால் அதிரடிப்படை போலீஸ் ஆபிசராக வரும் பெரோஸ்கான் தான். வழக்கமான வில்லன் கோட்டாவில் இடம்பிடிக்கிறார் கோட்டா சீனிவாசராவ். அவர் மகளை கொல்ல முடிவெடுக்கும் காரணம் அவருக்கு சரியானதாக இருந்தாலும் இந்த காரணத்துக்காக ஒருவன் தன மகளையே கொல்லத்துணிவது ஏற்புடையதாக இல்லை.
படத்தில் காட்டுப்பகுதியை அப்படியே அள்ளிவந்திருக்கும் ஒளிப்பதிவாளர் ராமலிங்கத்தின் பணி பாராட்டுதலுக்குரியது. படத்தை இயக்கியுள்ள பத்மராஜ், இயக்குனர் சமுத்திரகனியிடம் துணை இயக்குனராக வேலைபார்த்தவர் என்றால் நம்பமுடியவில்லை. கதை தேர்வு மற்றும் நடிகர்களின் தேர்வில், குறிப்பாக கதாநாயகி தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்..