தான் காதலிக்கும் கீர்த்தி சுரேஷை கவர்வதற்காக டீக்கடை, ரியல் எஸ்டேட் பிசினஸ் என மதுரை ஏரியாவில் அவ்வப்போது ஏதாவது ஒன்றை செய்து வருகிறார் சிவகார்த்திகேயன்.. அவரது தாத்தாவான ராஜ்கிரண் தனது பூர்வீக வீட்டை விற்று, அதில் வரும் பணத்தை தனது நான்கு மகன்களுக்கும் பங்கிட்டு கொடுக்க விரும்பி அந்த வேலையை சிவகார்த்திகேயனிடம் ஒப்படைக்கிறார்.
ஆனால் ஊரில் எல்லோரையும் மிரட்டி பணம் பறித்துவரும் சமுத்திரக்கனி, தானும் தாத்தாவின் வைப்பாட்டி பேரன் என சொல்லிக்கொண்டு தனக்கும் ஒரு பங்கு கேட்டு மல்லுக்கு நிற்கிறார்.. அதற்காக போலியான ஆதாரங்களை உருவாக்குகிறார். இந்த சிக்கலில் இருந்து சமுத்திரக்கனியை சிவகார்த்திகேயன் விலக்குவதற்கு எடுக்கும் நடவடிக்கை தான் மீதிப்படம்.
சிவகார்த்திகேயனுக்கு செட்டாகின்ற ரோல் என்பதால் காட்சிக்கு காட்சி கலகலப்பூட்டுகிறார்.. கூடவே சூரியும் சேர்ந்துகொள்ள கேட்கவும் வேண்டுமா..? ஒரே கலாட்டா தான்… அழகு மயிலாக வரும் கீர்த்தி சுரேஷை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்.. சிவா, கீர்த்தி காதல் காட்சிகள் கலகலப்பு.
ஏழரை மூக்கனாக வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் சமுத்திரக்கனியும் ரசிக்க வைக்கிறார். ராஜ்கிரண், ஞானசம்பந்தன் உட்பட பலரது நடிப்பும் ஒவ்வொரு காட்சிக்கும் பக்கபலம். இமானின் இசையில் பாடல்கள் திகட்டவில்லை. இருந்தாலும் ஒரு பாடலை தூக்கியிருக்கலாம். ஏற்கனவே பார்த்து பழகிய சில காட்சிகள் இருந்தாலும் கூட மாற்ற காட்சிகளை ரசிக்கும்படியாக படமாக்கியுள்ளார் இயக்குனர் பொன்ராம்.
ஆற்றுப்பாலத்தின் நடுவே திடீரென நாய் குறுக்கே வருவது போன்ற லாஜிக் மீறல்கள் நிறைய இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் பேமிலி ஆடியன்சை குறிவைத்து கமர்ஷியல் படமாக வெளியாகியுள்ள ரஜினி முருகன் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக ஜெயிக்கிறான்.