பேய்கள் ஜாக்கிரதை – விமர்சனம்


இன்னும் சில நாட்களில் பேய்க்கதைகளுக்கு நிச்சயம் பஞ்சம் வந்துவிடும் என்பது இந்தப்படத்தில் கையாளப்பட்டுள்ள கதையை பார்க்கும்போது நிச்சயமாக தெரிகிறது.. ஹீரோவின் கண்களுக்கு மட்டுமே தெரியும் பேய்கள் அவர் மூலமாக தங்களது ஆசைகளை நிறைவேற்றும் ‘மாசு’ மற்றும் ‘ஓம் சாந்தி ஓம்’ வரிசையில் இந்த வருடத்திய மூன்றாவது படம் இது.

அனாதையான ஜீவரத்னம், பேய் என்றாலே பயப்படும் பணக்காரர் தம்பி ராமையா வீட்டில் அவருக்கு துணையாக தங்குகிறார்.. தம்பி ராமையாவுக்கு பேய் பயம் போய்விட, இப்போது ஜீவரத்தினம் கண்களுக்கு நான்கு பேய்கள் தெரிகின்றன. அவை யார்.. அவற்றின் குறிக்கோள் என்ன..? இறுதியில்… அட போங்கப்பா..

கதாநாயகனாக அறிமுகம் ஆகும்போது பேய்க்கதையில் நடித்தால் ஒர்க் அவுட் ஆகிவிடும் என சொல்லி இளைஞன் ஜீவரத்னத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.. ஆனால் அவரை விட அதிக நேரம் வரும் தம்பி ராமையா தான் நிறைய இடங்களில் ஸ்கோர் செய்கிறார்.. இருந்தாலும் ஜீவரத்னம் மேல் அவ்வளவு பெரிதாக உறுத்தல் ஏற்படவில்லை என்பது ஆறுதல்.. கதாநாயகி ஈசான்யாவும் அழகு முகம் தான்.

நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, பிளாக் பாண்டி என காமெடி வண்டியில் இன்னும் மூன்று சக்கரங்களை பூட்டியுள்ளார்கள். வண்டியும் ஏதோ நெளிந்தவாறே ஓடுகிறது. ஏற்கனவே வெளிவந்த கதைக்களத்தில் இந்தப்படத்தின் இயக்குனர் தனது கதையை அமைத்தது ஏன் என்பது புரியாத புதிர்.. நம்மை விட்டு பிரிந்தாலும் நம் மீது பாசமுள்ள ஆன்மாக்கள் நம்மை சுற்றி எப்போதும் கூடவே இருக்கும் என்பதை சுற்றி.. சுற்றி.. வளைத்து வளைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் கண்மணி.

Black PandiIshanyaJeevarathnammanobalaNan Kadavul RajendranPeigal JaakirathaiPeigal Jaakirathai ReviewThambi Ramaiahபேய்கள் ஜாக்கிரதை