’என் 4’ (N4) விமர்சனம்

நடிகர்கள் : மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, வினுஷா தேவி, அனுபமா குமார், அப்சல் அமீத், அக்‌ஷய் கமல், பிரக்யா நக்ரா, வடிவுக்கரசி, அபிஷேக் சங்கர், அழகு
இசை : பாலசுப்பிரமணியன்.ஜி
ஒளிப்பதிவு : திவ்யங்
இயக்கம் : லோகேஷ் குமார்
தயாரிப்பு : தர்ம்ராஜ் பிலிம்ஸ் – நவீன் சர்மா, லோகேஷ் குமார்

பெற்றோர் இல்லாத மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகியோரை சிறு வயதில் இருந்து வடிவுக்கரசி வளர்த்து வருகிறார். இவர்கள் சென்னை காசிமேடு பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். கல்லூரி மாணவரான அக்‌ஷய் கமல் தனது நண்பர்களுடன் அடிக்கடி காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து மது அருந்துவது, சிகரெட் புகைப்பது என்று இருக்கிறார். அப்பகுதியில் இருக்கும் ‘N4’ காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக அனுபமா குமார் பணியாற்றுகிறார்.

ஒரே பகுதியை சேர்ந்தவர்களாக இவர்கள் அனைவரும் இருந்தாலும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் இருக்க, ஒரு சம்பவம் இவர்கள் அனைவரையும் ஒரே வட்டத்திற்குள் வரவைக்கிறது. அந்த சம்பவம் என்ன? அதனால் யார் யாருக்கு எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தது? என்பதை சொல்வதே ’என் 4’ படத்தின் மீதிக்கதை.

படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் கதையோடு பயணிப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, அதில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் என அனைவரும் கதபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

அனைத்து நடிகர்களும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், மைக்கேல், கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகியோருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு பேரும் தங்களது வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

அக்‌ஷய் கமல் மற்றும் பிரக்யா நக்ரா ஜோடி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அனுபமா குமார், வடிவுக்கரசி, அழகு, அபிஷேக் என அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்து மனதில் நிற்கிறார்கள்.

கதை துவக்கத்தில் இருந்து முடிவு வரை வரும் சில கதாபாத்திரங்களும், அதில் நடித்திருக்கும் இளைஞர்களும் கவனம் பெறும் விதத்தில் நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெறும் கதையை மிக இயல்பாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் திவ்யங், தனது கேமராவையும் ஒரு கதாபாத்திரமாக பயணிக்க வைத்திருக்கிறார்.

டைடில் பாடல் மூலம் கவனம் ஈர்க்கும் இசையமைப்பாளர் பாலசுப்பிரமணியம்.ஜி, அளவான பின்னணி இசை மூலம் கதையுடன் பயணித்திருக்கிறார்.

காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் அதை சுற்றி வசிக்கும் சில மனிதர்களின் வாழ்வியல் மற்றும் அவர்களை ஒரே வட்டத்திற்குள் கொண்டு வரும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து விறுவிறுப்பான சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் படத்தை கொடுக்க இயக்குநர் லோகேஷ் குமார் முயற்சித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் கதாபாத்திரங்கள் மூலம் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், திரைக்கதை மெதுவாக நகர்வது சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும், காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிகளை காட்சிப்படுத்திய விதம், கதபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்தது, அவர்களிடம் நடிப்பு வாங்கியது, போன்றவை படத்தை ரசிக்க வைக்கிறது.

ரேட்டிங் 2.75/5

kollywood movie reviwn4 reviewtamil cinema reviewtamil movie n4 review