தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளரும் அர்ஜுன் எந்த வேலையிலும் நிலைத்து நிற்காதவர். ஆனால் தனது நண்பன் வெங்கடேஷின் பக்கத்து பிளாட் அதிதி மீது காதல். தனது நண்பனுடன் சேர்ந்துகொண்டு ‘தடங்கலுக்கு வருந்துகிறோம் சர்வீஸ்’ என ஒரு கம்பெனியை ஆரம்பிக்கிறார் அர்ஜுன். இதன்மூலம் ஒருவர் இன்னொருவரிடம் நேரடியாக சொல்ல தயங்கும் செய்தியை அவர்களிடம் சொலவதுதான் வேலை.
மாப்பிள்ளை பையன் ஒருவனின் சொல்படி, ஒரு கல்யாண மண்டபத்திற்குச்சென்று மணப்பெண்ணை பற்றி மாப்பிள்ளை வீட்டாரிடம் தவறாக சொல்லி திருமணத்தை நிறுத்துகின்றனர் இருவரும். பின்னர்தான் அந்தப்பெண் தன்னுடைய காதலியின் அக்கா என தெரியவருகிறது அர்ஜுனுக்கு.. தான் ஏற்படுத்திய சிக்கலை எப்படி சமாளித்து சரியாக்குகிறார் என்பது மீதிக்கதை.
சரியான லொடலொடவாயன் என்பார்களே அப்படியொரு கதாபாத்திரம் அர்ஜுனுக்கு அதனாலேயே அவரை முழுமையாக ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. அழுத்தமான கதாபாத்திர இல்லாததால் அதிதியின் நடிப்புக்கு மதிப்பீடு தரமுடியாத நிலை. ஏதோ வந்தோம் போனோம் என வந்து போகிறார்.
நண்பனாக வரும் வெங்கடேஷ் ஹரிநாதனின் நகைச்சுவை காட்சிகள் பத்து சதவீதம் மட்டுமே சிரிக்க உத்தரவாதம் தருகின்றன. மற்றபடி காமெடி என்கிற பெயரில் வறட்டுக்கடி கடித்திருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் ட்ரெண்டிற்கு, எஸ்.பி.பி-லட்சுமி இருவரின் கதாபாத்திரங்களும் ரொம்பவே ஓல்டு வெர்ஷன்.. இயக்குனர் பாக்யராஜ், அவராகவே வரவேண்டிய அவசியம் படத்தில் எதுவுமே இல்லையே..
படத்தின் இயக்குனர் மதுமிதாவுக்கு மூணே மூணு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால்,
‘பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம்’.