காதலும் கடந்து போகும் – விமர்சனம்

சூதுகவ்வும்’ பட இயக்குனர் நலன் குமாரசாமி-விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாக்கி இருக்கும் இரண்டாவது படம் இது.

லோக்கல் தாதா ஒருவரிடம் அடியாள் வேலை பார்ப்பவர் விஜய்சேதுபதி.. ஜெயிலுக்கு போய்வந்த பின் இனிமேல் அடிதடி, கட்டப்பஞ்சாயத்தை ஒதுக்கிவிட்டு, பார் வைத்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறார். ஆனால் லோக்கல் இன்ஸ்பெக்டரான சமுத்திரக்கனி, தனது தம்பிக்கு பாரை ஏலத்தில் எடுக்கும் முயற்சியில் இவர்களுக்கு குடைச்சல் கொடுக்கிறார்.

விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்து சாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்ப்பவர் மடோனா செபாஸ்டியன்.. வேலைக்கு சேர்ந்து சில மாதங்களில் நிறுவனம் இழுத்து மூடப்பட, இவர் சாதாரண கல்லூரியில் படித்தவர் என்பதால் மற்ற கம்பெனிகளில் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது..

இந்த நிலையில் வேலைபோன விஷயத்தை வீட்டிற்கு சொல்லாமல், தோழிகளுடன் தங்கியிருந்த வசதியான வீட்டை விட்டுவிட்டு, விஜய்சேதுபதி குடியிருக்கும் சாதாரண அபார்ட்மென்ட்டில் அவருக்கு எதிர் வீட்டில் தங்கி வேலை தேடுகிறார் மடோனா.. இரண்டு பேருக்கும் சின்னசின்ன மோதல்களில் நட்பு ஆரம்பமாகி ஒறுகட்டத்தில் ஒன்றாக தண்ணியடித்து, தங்களது சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளும் ளவுக்கு நட்பாகின்றனர்..

மடோனாவுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு இருந்தும் இண்டர்வியூ அட்டென்ட் பண்ண முடியாத சூழலில் விஜய்சேதுபதி அவருக்கு சாமர்த்தியமாக உதவுகிறார். ஆனால் வெற்றிபெற்று திரும்பும் மடோனாவாழ் அதன்பிறகு விஜய்சேதுபதியை பார்க்கவே முடியவில்லை. விஜய்சேதுபதிக்கு என்ன ஆச்சு.. மடோனாவுக்கு அவர் மீது ஏற்பட்டது காதல் தனா..? என்பதற்கு க்ளைமாக்ஸ் விடை சொல்கிறது.

கொரியன் படத்தின் தழுவல் என தைரியமாக டைட்டில் கார்டிலேயே இயக்குனர் நலன் குமாரசாமி போட்டு விடுவதால், நாமும் படம் பார்க்கும்போது அந்த மூடுக்கு எளிதாக செட்டாகிக்கொள்ள முடிகிறது. விஜய்சேதுபதியும் மடோனாவும் சேர்ந்து நமது நேரத்தை தங்களது சுக துக்கங்களால் அழகாக கடத்துகின்றனர். ரவுடி என்றால் அடிச்சுக்கிட்டே இருப்பானா, அடிவாங்குறவனும் ரவுடி தான் என விளக்கம் கொடுப்பதோடு அந்த கேரக்டரில் செமையாக பிட் ஆகிறார் சேதுபதி. இண்டர்வியூவை தாமதப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் வல்லாரை கீரை டிப்ஸ் கொடுப்பது செம லந்து.

பார்த்ததுமே, காதலிக்க தூண்டுவதைவிட, நட்பாக பழகத்தூண்டும் முகம் மடோனாவுக்கு.. விஜய்சேதுபதியுடனான இவரது பொய்க்கோப உரசல்கள் ரசிக்கவைக்கின்றன. அதிலும் வியாஜ்ய்செதுபதியுடன் ஒன்றாக தண்ணியடித்துவிட்டு, ஒரே ரூமில் தூங்கி எழுந்து, மறுநாள் அதற்கு ‘எஸ்கிமோ நாய்’ பற்றிய ஒரு விளக்கம் சொல்கிறார் பாருங்கள்.. சான்ஸே இல்லை. தமிழுக்கு இன்னொரு அழகு ஹீரோயின் கிடைச்சாச்சு

சமுத்திரக்கனி ஒன்று போலீஸாக நடிப்பார். இல்லை கெட்டவராக நடிப்பார். இதில் இரண்டையும் சேர்த்து கெட்ட போலீசாக நச்சென நாலு சீன்களில் வந்துவிட்டு போகிறார். விஜய்சேதுபதியின் அடியாள் நண்பர்கள் குழாம் ஆகட்டும், மடோனாவின் பெற்றோர் ஆகட்டும் கதையின் மாந்தர்கள் அனைவரும் இயல்பாக உலாவருகிறார்கள்.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை காட்சிகளை அழகாக்கியுள்ளது. ‘ஒரு ஊருல’ ‘ககபோ’ பாடல்கள் சூப்பர்.. விறுவிறுப்பு கொஞ்சம் குறைவுதான்.. ஆனால் இன்னும் கொஞ்சம் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கக்கூடாதா என ஏக்கப்பட வைக்கிறார் நலன் குமாரசாமி.. அதேசமயம் வேலை போனதை சொல்வதற்கே பயப்படும் மடோனா, காதலன் இருப்பதாக நாடகம் ஆட்டும் காட்சிகள் மட்டும் கதையுடன் ஒட்டாமல் தனித்து நிற்கிறது..

இருந்தாலும் இந்த காதல் மயிலிறகாய் நம்மை வருடிவிட்டே கடந்துபோகிறது.

Kadhalum kadanthu pogumKadhalum Kadanthu Pogum Movie reviewmadonna SebastinNalan KumarasamySamuthirakaniStudio GreenVijay Sethupathi