இயக்குநர் விஜய் சந்தர் தயாரிப்பில், குரு சரவணன் மற்றும் சபரி இயக்கத்தில், ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியாகியிருக்கும் திகில் படமான ‘கார்டியன்’ மிரட்டுகிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.
நடிகர்கள் : ஹன்சிகா, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, மொட்டை ராஜேந்திரன், டைகர் கார்டன் தங்கதுரை, ஷோபனா பிரனேஷ், பேபி க்ரிஷிதா
இசை : சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு : கே.ஏ.சக்திவேல்
இயக்கம் : குரு சரவணன், சபரி
தயாரிப்பு : ஃபிலிம் ஒர்க்ஸ் – விஜய் சந்தர்
சிறு வயதில் இருந்தே எதை செய்தாலும் தவறாக முடிவதால் தான் அதிஷ்ட்டம் இல்லாதவள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நாயகி ஹன்சிகாவின் வாழ்வில் திடீர் மாற்றம் நிகழ்கிறது. கிடைக்காத வேலை அவருக்கு கிடைப்பதோடு, அவர் என்ன நினைக்கிறாரோ அவை அனைத்துமே நடக்கிறது. அவருக்கு இது நல்லதாக இருந்தாலும், மற்றவருக்கு அது தீமையில் முடிகிறது. அதாவது, ஒருவரை பார்த்து ஹன்சிகா போய்விடுவான் என்று சொன்னால், அவர் அடுத்த சில மணி நேரங்களில் உயிரிழந்து விடுவார். இப்படி ஒரு சக்தி தனக்கு வந்திருப்பதை நினைத்து வருந்தும் ஹன்சிகா, அதன் பின்னணி என்னவென்று தெரியாமல் குழப்பமடையும் நிலையில், அவரை ஒரு அமானுஷ்யம் பின் தொடர்வதை அவர் அறிந்துக்கொள்கிறார்.
அந்த அமானுஷ்யம் தான் தன் வாழ்க்கையில் ஏற்பட திடீர் மாற்றத்திற்கு காரணம் என்பதை தெரிந்துக்கொள்வதோடு, சிலரை பழிவாங்க அந்த அமானுஷ்யம் தன்னை பயன்படுத்துவதையும் அவர் தெரிந்துக்கொள்கிறார். அந்த அமானுஷ்யம் யார்?, எதற்காக அது ஹன்சிகாவை பயன்படுத்துகிறது?, யாரை கொலை செய்ய முயற்சிக்கிறது? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, முழு படத்தையும் தனி நபராக சுமந்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் அதிஷ்ட்டம் இல்லாதவராக நடித்து இரக்கப்பட வைப்பவர், இரண்டாம் பாதியில் பேயாக மிரட்டவும் செய்கிறார்.
பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகிய நான்கு பேரும் வழக்கமான வில்லன்களாக நடித்திருக்கிறார்கள்.
மொட்டை ராஜேந்திரன், டைகர் கார்டன் தங்கதுரை ஆகியோர் சிரிக்க வைக்க போராடுகிறார்கள். அபிஷேக் வினோத், ஷோபனா பிரனேஷ், தியா, பேபி க்ரிஷிதா ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவும், சாம்.சி.எஸ்-ன் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
அமானுஷ்ய படங்களுக்கான ரெகுலர் பார்மட்டில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் குரு சரவணன், சபரியுடன் இணைந்து இயக்கவும் செய்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் ஹன்சிகாவை அன்லக்கியாக காட்டிய விதமும், அதன் பிறகு நிகழும் அதிசயங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அடுத்தடுத்த காட்சிகள் பழைய பாணியில் பயணித்து படத்தை சற்று தொய்வடைய செய்துவிடுகிறது.
காட்சிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களை மிரள வைப்பது தான் திகில் படங்களின் முதல் பணி. ஆனால், அத்தகைய வேலையை இந்த படம் செய்ய சற்று தவறியிருக்கிறது.
ரேட்டிங் 2.5/5