நடிகர்கள் : ராஜன் தேஜஸ்வர், ஐரா அகர்வால், ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி
இசை : மிக்கி ஜெ .மேயர்
ஒளிப்பதிவு : பரத் குமார்
இயக்கம் : திருஅருள் கிருஷ்ணா
தயாரிப்பு : சி.ஆர்.ராஜன்
மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அம்மக்களின் வாழ்வியலை அதிகம் பேசும் தமிழ் சினிமாவில் கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் அம்மக்களின் வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்யும் ஒரு படைப்பாக மட்டும் இன்றி அந்த கதைக்களத்தை ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் பாணியில் சொல்லி ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக வெளியாகியிருக்கிறது ‘அமரம்’.
கிழக்குத் தொடர்ச்சி மலை கிராமம் ஒன்றில் விவசாயம் பொய்த்து போன நிலையில், அம்மக்களின் பொருளாதார நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில பெரிய மனிதர்கள், அவர்களுக்கு குறைவான கூலி கொடுத்து செம்மரம் வெட்டுவது, கொலை செய்வது போன்ற தவறான வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். கூலிப்படை நபராக இருக்கும் அந்த கிராமத்தைச் சேர்ந்த நாயகன் ராஜன் தேஜஸ்வர், நாயகி ஐரா அகர்வாலின் தந்தையை அவர் கண் முன்னே கொலை செய்கிறார்.
தனது தந்தையை கொலை செய்தவரை கொன்று பழி தீர்க்க முடிவு செய்யும் நாயகி ஐரா அகர்வால், கொலையாளி பற்றி எந்த ஒரு ஆதாரமும் இல்லாத போதிலும் அவரை தேடி செல்ல முயற்சிக்கிறார். அவரது காதலர் மற்றும் அவரது தந்தையான எம்.எல்.ஏ நாகிநீடு அவருக்கு உதவ முன் வருகிறார்கள். அதன்படி ராஜன் தேஸ்வர் கண்டுபிடிக்கப்பட்டு, அவரை கொலை வெறியோடு நெருங்கும் ஐரா அகர்வால், திடீரென்று மனம் மாறி அவரை கொலை செய்யும் முடிவை கைவிட்டு விடுகிறார். இதனால், எம்.எல்.ஏ மற்றும் அவரது மகனால் அவருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அந்த ஆபத்தில் இருந்து அவரை காப்பாற்ற முயற்சிக்கும் நாயகனுக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் காவல்துறை மற்றும் எம்.எல்.ஏ ஆட்களினால் பேராபத்து ஏற்படுகிறது. அந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க நாயகியுடன் பயணிக்கும் நாயகன் ராஜன் தேஜஸ்வர், நாயகியையும், தன் ஊர் மக்களையும் காப்பாற்றினாரா ? , இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ராஜன் தேஜஸ்வர், முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதிகம் பேசாமல் படம் முழுவதும் அமைதியாக இருந்தாலும், தன் பார்வையின் மூலமாகவே பலவித உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் மிக கடுமையாக உழைத்திருக்கும் ராஜன் தேஜஸ்வர், கரமுரடான பழங்குடியினர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஐரா அகர்வால், துடிப்பான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். தந்தையின் கொலைக்கு பழி தீர்க்க கொலை வெறியோடு நாயகனை தேடுபவர், அவர் கிடைத்தும் கொலை செய்ய முடியாமல் தடுமாறும் காட்சியில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
பழங்குடியின சமூக மூத்தவராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான், பழங்குடி மக்களை கூலிப்படையாக பயன்படுத்தும் சாய் தீனா, எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.
ஒளிப்பதிவாளர் பரத் குமார், கிழக்குத் தொடர்ச்சி மலை கிராமங்களின் வறட்சியையும், மகிழ்ச்சியற்ற அம்மக்களின் முகங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் மிரட்டல்.
மிக்கி ஜெ .மேயர் இசையில் பாடல்கள் கதைக்களத்திற்கு ஏற்றபடியும், புதுமையாகவும் இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டியிருப்பதோடு, திரைக்கதையின் வேகம் மற்றும் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் பயணித்திருக்கிறது.
படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் பயணிக்க வைக்கும் விதத்தில் காட்சிகளை தொகுத்திருக்கும் ஆர்.ஸ்ரீராமர், அனைத்துக் காட்சிகளையும் சுருக்கமாக தொகுத்து படத்தை விறுவிறுபாக நகர்த்தியிருப்பதோடு, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பற்றிய தகவல் மற்றும் அம்மக்களின் வாழ்வியல் எளிய முறையில் சொல்லப்பட்டிருந்தாலும், பார்வையாளர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்து விடுகிறார்.
செம்மரம் வெட்டுபவர்கள் மற்றும் கூலிப்படையாக செயல்படுகிறவர்கள் யார் ?, அவர்களது பின்னணி என்ன ?, என்பதை தைரியமாக சொல்லியிருப்பதோடு, தங்களது சுயலாபத்திற்காக அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் பெரிய மனிதர்களின் முகத்திரையை கிழிக்கும் விதத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் திருஅருள் கிருஷ்ணா.
சொல்லப்படாத ஒரு சமூக மக்களின் வாழ்வியலை பின்னணியாக வைத்துக் கொண்டு காதல், காமெடி, ஆக்ஷன் போன்ற கமர்ஷியல் அம்சங்களை அளவாக கையாண்டிருக்கும் இயக்குநர் திருஅருள் கிருஷ்ணா, இந்த ‘அமரம்’ மூலம் சொல்லப்படாத ஒரு சமூகத்தின் வலி நிறைந்த வாழ்வியலை சொன்னாலும், அதனுடன் காதல், காமெடி, ஆக்ஷன் போன்ற கமர்ஷியல் அம்சங்கள் சேர்த்து அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இந்த ‘அமரம்’ படத்தை கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 4/5