’மாயோன்’ விமர்சனம்


நடிகர்கள் : சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார், பகவதி பெருமாள், ஹரீஷ் பெராடியா
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : ராம் பிரசாத்
இயக்கம் : என்.கிஷோர்
தயாரிப்பு : அருண்மொழி மாணிக்கம்

பழங்காலத்து கோவில் ஒன்றில் இருக்கும் புதையலை கொள்ளையடிக்க சமூக விரோத கும்பல் ஒன்று திட்டமிடுகிறது. அதற்காக அரசுத் தொல்லியல்த்துறையை சேர்ந்த சில அதிகாரிகளை தங்களுடன் சேர்த்துக்கொண்டு கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அவர்களுடைய திட்டம் பலித்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

படத்தின் ஹீரோ சிபிராஜ், ஹீரோயின் தன்யா ரவிச்சந்திரன், முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், ஹரிஷ் பெராடியா, பகவதி பெருமாள் என அனைவரும் தொல்பொருள் துறையில் பணியாற்றுபவர்களாக நடித்திருப்பதால் முழு படமும் தொல்லியல்த்துறைப் பற்றி நேர்த்தியாக எடுத்துச் சொல்வதோடு நமது பழங்கால கோவில்களின் பெருமைகளையும் விரிவாக சொல்லியிருக்கிறது.

தொல்லியல்துறையில் பணியாற்றும் இளைஞராக நடித்திருக்கும் சிபி ராஜ், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகள், வில்லத்தனம் மற்றும் எதிர்பாராத திருப்புமுனை சம்பவங்கள் என அனைத்திலும் திரம்பட நடித்து கவனம் பெறுகிறார்.

ஹீரோயினாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாப்பாத்திரமாக படம் முழுவதும் வருகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார், ஹரிஷ் பெராடியா ஆகியோர் அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். பகவதி பெருமாள் குணச்சித்திர வேடத்தில் நடித்தாலும் பல இடங்களில் நம்மை சிரிக்கவும் வைக்கிறார்.

ராம் பிரசாத்தின் ஒளிப்பதிவில் பழங்காலத்து கோவில்களும், கோவில் சார்ந்த இடங்களும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோவில் மற்றும் அதை சுற்றி நடக்கும் மர்மமான சம்பவங்களை மிரட்டும் வகையில் படமாக்கியிருக்கிறார்.

இளையராஜாவின் இசையில் ”மாயோனே…” பாடல் மயங்க வைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணிப்பதோடு படத்தின் விறுவிறுப்பையும் கூட்டுகிறது.

தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கத்தின் கதை மற்றும் திரைக்கதை நம் பழங்காலத்து கோவில்களின் பின்னணியையும், அதன் பெருமை மற்றும் அதில் இருக்கும் பொக்கிஷங்கள் குறித்து விரிவாக பேசுவதோடு, படத்தை சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறது.

அருண்மொழி மாணிக்கத்தின் திரைக்கதைக்கு பரபரப்பான காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருக்கும் என்.கிஷோர், தொல்லியல்த்துறை பற்றியும் அதன் பணிகள் பற்றியும் மிக நேர்த்தியாகவும் விரிவாகவும் சொல்லியிருக்கிறார்.

பழங்கால கோவில்களில் இருக்கும் பொக்கிஷங்கள் மற்றும் அதை பாதுகாக்கும் வழிகளை வியக்கும் வகையில் சொல்லியிருக்கும் இயக்குநர், எதிர்பாராத திருப்பங்கள் மூலம் முழு படத்தையும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்க வைக்கிறார்.

arunmozhi manikkamdirector koshorkollywood movie reviewmaayon reviewSibirajtamil movie maayon reviewtanya ravichandran