நடிகர்கள் : கார்த்திக் மதுசூதனன், ஷ்ரிதா சிவதாஸ், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி
இசை : கே.சி.பாலசங்கரன்
ஒளிப்பதிவு : மதன் சுந்தர்ராஜ் & சுனில் ஜி.என்
இயக்கம் : கார்த்திக் மதுசூதனன் & சாம் ஆ.டி.எக்ஸ்
தயாரிப்பு : கனெக்டிங் டாட்ஸ் புரொடக்ஷன்ஸ்
காதலை வெறுக்கும் ஹீரோ கார்த்திக் மதுசூதனன், பெண்களுடனான உறவு பிக்கப் மற்றும் டிராப் என்ற நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே திருமணம் ஒன்றில் நாயகி ஷ்ரிதா சிவதாஸை சந்திக்கும் ஹீரோ, அவரை பிக்கப் பண்ண முயற்சிக்கிறார். ஆனால், அதற்கு இடம் கொடுக்காத ஹீரோயின் அவருடைய வெளிப்படையான பேச்சால், அவருடன் நட்பாக பழக ஆரம்பிக்க, அது காதலாக மாறுகிறது. தன் காதலை ஹீரோவிடம் சொல்ல, அவரோ தனது கொள்கைக்கு காதல் சரிபட்டு வராது என்று மறுத்துவிடுகிறார். சில நாட்களுக்குப் பிறகு ஹீரோவின் மனதிலும் காதல் பிறக்க, நாயகி ஷ்ரிதா சிவதாஸிடம் தன் காதலை சொல்கிறார். ஆனால், ஹீரோயின் ஷ்ரிதா சிவதாஸ் சொல்லும் ஒரு விஷயம், ஹீரோவுக்கு மட்டும் அல்ல, படம் பார்க்கும் நமக்கும் பேரதிர்ச்சியாக இருக்கிறது. அந்த அதிர்ச்சி என்ன?, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை இனிப்பு, கசப்புமாக சேர்த்து சொல்வது தான் ‘டூடி’.
ஹீரோ கார்த்திக் மதுசூதனன், அறிமுகம் என்பதை தாண்டிய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய குரலும், நடிக்கும் விதமும் உற்சாகமாகவும், ஈர்க்கும் வகையிலும் இருக்கிறது. சில இடங்களில் சிறு சிறு தடுமாற்றங்கள் தெரிந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து தன்னை நடிகராக நிரூபித்துவிடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஷ்ரிதா சிவதாஸ், சாதாரண கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் கனமான கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். பெண்களின் பார்வையில் காதல் எப்படி இருக்கிறது என்பதை தனது ஒவ்வொரு அசைவிலும் வெளிக்காட்டியிருக்கும் ஷ்ரிதா சிவதாஸ், ஏக்கம், தவிப்பு, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என பெண்களின் அனைத்து உணர்வுகளையும் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கார்த்திக் மதுசூதனன் மற்றும் ஷ்ரிதா சிவதாஸ் இருவரும் படம் முழுவதையும் சுமந்தாலும், அவ்வபோது வரும் சில கதாப்பாத்திரங்களும் கவனம் பெறுகிறது. குறிப்பாக ஹீரோவின் முன்னாள் காதலியின் கணவராக நடித்திருக்கும் நடிகரின் முதல் காதல் பற்றிய பதிவு, நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி, ஜீவி மதுசூதன், உத்ரா என அனைவரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கே.சி.பாலசங்கரன் கதைக்கு ஏற்றவாறு பாடல்களையும், பின்னணி இசையையும் கொடுத்திருந்தாலும், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். இதுபோன்ற காதல் மற்றும் காதல் வலியை உணர்த்தும் படங்களுக்கு பாடல்கள் மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும். ஆனால், இந்த படத்தின் பாடல்கள் அந்த வரிசையில் இல்லாமல் போனது படத்திற்கு சற்று பலவீனம்.
மதன் சுந்தர்ராஜ் மற்றும் சுனில் ஜி.என் ஆகியோரது ஒளிப்பதிவு காட்சிகளை இயல்பாக படமாக்கியிருப்பதோடு, கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்தும் விதத்திலும் காட்சிகளை கையாண்டிருக்கிறது.
கதை எழுதி ஹீரோவாக நடித்திருக்கும் கார்த்திக் மதுசூதன், சாம் ஆர்.டி.எக்ஸ் உடன் இணைந்து படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். வழக்கமான காதல் கதை தான் என்றாலும் அதை வித்தியாசமான கோணத்தில் இயக்குநர்கள் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
ஹீரோவுக்கு ஹீரோயின் மீது காதல் வரும் போது, ஹீரோயின் அதை ஏற்க தடுமாறுவது மற்றும் அதற்கான காரணம் மற்றும் பெண்களின் காதலை சொல்லிய விதம் புதிதாகவும், படத்திற்கு பலமாகவும் இருக்கிறது.
கிளைமாக்ஸில் வைக்கப்பட்டிருக்கும் ட்விஸ்ட் எதிர்பாரத ஒன்றாக இருப்பதோடு, பெண்களின் காதல் தோல்விகளையும், காதல் என்றால் என்ன? என்று தெரியாத வயதில் வரும் காதலால் எப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது? என்பதையும் மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறது.
மேக்கிங்கில் சில குறைபாடுகள் இருந்தாலும், தான் எடுத்துக்கொண்ட கதையை நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லிய விதத்தில் இயக்குநர்கள் கார்த்திக் மற்றும் சாம் இருவரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ரேட்டிங் 3/5