நடிகர்கள் : ஜோதிகா, சமுத்திரக்கனி, சசிகுமார், சூரி, கலையரசன் மற்றும் பலர்
இசை : டி.இமான்
ஒளிப்பதிவு : வேல்ராஜ்
இயக்கம் : இரா.சரவணன்
தயாரிப்பு : சூர்யா, ஜோதிகா
அண்ணன் சசிகுமாரும், அவருடைய தங்கை ஜோதிகாவும் ஒருவருக்கொருவர் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருக்கிறார்கள். ஜோதிகாவின் கணவர் சமுத்திரக்கனியால், அண்ணன், தங்கை உறவில் விரிசல் ஏற்படுவதோடு, குடும்பங்களும் பிரிந்துவிட, பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் கதை.
பாசம் மற்றும் பிரிவு பற்றி பேசும் அண்ணன், தங்கை படங்கள் வரிசையில், இப்படத்தின் திரைக்கதையும் இரு
அண்ண, தங்கை பாசத்தை சொல்லும் படம் என்றாலே ஒரே பார்மட் தான் என்றாலும், அண்ணன், தங்கை உறவில் ஏற்படும் சிக்கலுக்கான காரணத்தை சொல்லும் விதத்தில், ஒவ்வொரு படமும் வித்தியாசப்படும். அந்த வகையில், இரா.சரவணன், இந்த அண்ணன் – தங்கை பாசத்தை சொல்லும் படத்தில் சமூக கருத்துக்கள் பற்றி பேசி, மற்ற படங்களில் இருந்து இப்படத்தை மாறுபட்ட படமாக காட்டியிருக்கிறார்.
கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் ஜோதிகா, நடிப்பில் கம்பீரத்தையும், பாசத்தையும் வெளிக்காட்டி, தஞ்சை மாவட்ட பெண்ணாக அசத்துகிறார்.
ஜோதிகாவின் அண்ணனாக நடித்திருக்கும் சசிகுமார் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். பாசத்தை விட ஆக்ஷனில் புகுந்து விளையாடியிருக்கிறார்.
எந்த வேடமாக இருந்தாலும், தனது வசன உச்சரிப்பு மூலம் அந்த கதாப்பாத்திரத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வல்லவரான சமுத்திரக்கனி, சொல்லும் ஒவ்வொரு அறிவுரைகளும் வாழ்க்கைக்கு மிக தேவையானவைகளாக இருக்கின்றன.
வில்லங்கமான வேடத்தில் வில்லனாக நடித்திருக்கும் கலையரசன், நடிப்பில் புதிய பரிணாமத்தை பாராட்டும்படி வெளிப்படுத்தியிருக்கிறார். சூரியின் காமெடியிலும் குறையில்லை.
வேல்ராஜின் ஒளிப்பதிவு நேர்த்தி. டி.இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாகவும், பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாகவும் பயணித்துள்ளது.
அண்ணன், தங்கை பாசத்தை கதைக்களமாக எடுத்துக் கொண்டாலும், சமூக பிரச்சனைகள் குறித்து ஆழமாக அலசியிருக்கும் இயக்குநர் இரா.சரவணன், கிடைக்கும் இடங்களில் எல்லாம், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், நம் மண்ணை சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் பேசியிருக்கிறார்.
எளிமையான கதையாக இருந்தாலும், வலிமையான திரைக்கதை மற்றும் கூர்மையான வசனங்கள் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் இரா.சரவணன், அண்ணன், தங்கை பாசத்தோடு பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.