அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரண் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் இயக்கியுள்ள படம் தான் ‘ஆயிரத்தில் இருவர்’.
பிறந்ததில் இருந்தே எதற்கெடுத்தாலும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் இரட்டையர்கள் தான் வினய் & வினய்.. இதனால் ஒருவர் சின்ன வயதிலேயே வீட்டைவிட்டு ஓடிப்போய் ஹைதராபாத்தில் செட்டிலாகிவிட, குடும்பத்தினரோ அவர் இறந்துவிட்டதாகவே கருதுகிறார்கள் இன்னொரு வினய் திருநெல்வேலியில் உள்ள சொத்துக்களை தன் பேருக்கு மாற்ற முயற்சிக்கிறார்.
இந்த விபரம் அறிந்து தந்திரமாக திருநெல்வேலி வினய்யை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்தசமயத்தில் சொந்த ஊருக்கு வந்து தனது பெயருக்கு சொத்துகளை மாற்றி விற்க முயற்சிக்கிறார் இன்னொருவர்.. அவருடன் கூடவே ஹைதராபாத் காதலியும் வருகிறார்.. காதலியிடம் உள்ள சுவிஸ் வங்கி ரகசியத்தை கைப்பற்ற வேண்டி காதலியின் தந்தையும் சித்தியும் கிராமத்துக்கு படையெடுக்கிறார்கள்.
ஏற்கனவே அந்த ஊரில் நீண்டநாள் பகையாக வினய்யை போட்டுத்தள்ள காத்திருக்கிறார்கள் பங்காளி வகையறாவான ஸ்ரீஜித் ரவியும் அவரது அக்காவும். இவர்களுக்கிடையே தங்கள் தந்தையின் சாவுக்கு பழிதீர்க்க, பக்கத்து ஊர் ரவுடிக்கும்பலான அருள்தாஸ் அன் கோ உள்ளே நுழைகிறது.. இந்த முத்தரப்புக்கும் நடக்கும் கலாட்டா தான் மீதிப்படம்..
இரண்டு வினய் கேரக்டர்களையும், சுவாரஸ்யப்படுத்த முயன்றுள்ளார் இயக்குனர் சரண். வினய்யும் கொடுத்த வேலையை (மட்டும்) சரியாக செய்துள்ளார். கதாநாயகிகளாக வரும் ஸ்வஸ்திகா, சாமுத்ரிகா ஆகியோர் சரணின் கதாநாயகி தேர்வா இவர்கள் என உச் கொட்ட வைக்கிறார்கள். வில்லனாக வரும் ஸ்ரீஜித் ரவி பொருத்தமான தேர்வேன நிரூபிக்கிறார்.. அவரது அக்காவாக வருபரிடம் தான் அக்மார்க் சீரியல் வில்லத்தனம்.
இந்த களேபரத்தில் அருள்தாஸ் அன் கோ காமெடி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணவைக்கிறது. அதிலும் ரூம் நம்பரை மாற்றி சொல்லும் அந்த நபர் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார். அட. பிக் பாஸ் காஜல் பசுபதி படம் நெடுக ஒரு டான் மாதிரி வருகிறார். பிரதீப் ராவேத்துக்கு வேலை குறைவு தான். சுமார் மூஞ்சி டேனியலும் தன் பங்கிற்கு ஏதோ பண்ணுகிறார். மயில்சாமி, இளவரசு தனித்து தெரிகிறார்கள்.
சரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜ் தான் இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.. ‘ஓ போடு..ஓ போடு’, ‘சிரிச்சு சிரிச்சு வந்தா’ மாதிரி ரசிகர்களை ஆடவைக்கும் பாடல்களை இனிமேல் தரவே மாட்டீர்களா பரத்வாஜ்..? அண்ணன்-தம்பி கதை என்றாலே அடிதடி என்றே முடிவு கட்டப்பட்ட நிலையில் சரண் மற்றும் விதிவிலக்கா என்ன..? ஒரு காலத்தில் ‘அட்டகாசம்’ பண்ணிய நீங்கள், கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கலாமே சரண் சார்.. திரைக்கதையுடன் கவனமாக பயணிப்பவர்களுக்கு இந்தப்படம் சுவாரஸ்யம் கூட்டும்.. ஆனால் சரண் படம் என எதிர்பார்த்து வருபவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

Comments are closed.