நடிகர்கள் : அரவிந்த்சாமி, குஞ்சக்கோ போபன், ஜாக்கி ஷெராப், ஈஷா ரெப்பா, ஆடுகளம் நரேன், அமல்டா லிஸ், ஜின்ஸ் பாஸ்கர், சியாத் யாது, அனீஷ் கோபால், லபான் ரனே, ஸ்ரீகுமார் மேனன்
இசை : அருள்ராஜ் கென்னடி
ஒளிப்பதிவு : கெளதம் ஷங்கர்
இயக்கம் : பெளனி டி.பி
தயாரிப்பு : ஆர்யா, ஷாஜி நடேசன்
மும்பை தாதாவான அரவிந்த்சாமியை கொலை செய்ய எதிரிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். அதில் பலத்த காயமடைந்து உயிர் பிழைக்கும் அரவிந்த்சாமி, பழைய நினைவுகளை மறந்துவிடுகிறார். தாக்குதலின் போது அவரிடம் இருந்த 30 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியவில்லை. அந்த தங்கத்தை கைப்பற்ற நினைக்கும் கூட்டம், அரவிந்த்சாமிக்கு பழைய நினைவுகளை வர வைக்க முயற்சிக்கிறது. அந்த வேலையை செய்து முடிப்பதற்காக குஞ்சக்கோ போபன் நியமிக்கப்படுகிறார்.
அரவிந்த்சாமியுடன் நட்பாக பழகி அவரது பழைய நினைவுகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடும் குஞ்சக்கோ போபன், அதை செய்தாரா? இல்லையா? என்பதை எதிர்பார்க்காத பல திருப்பங்களுடனும், சுவாரஸ்யங்களுடனும் சொல்வது தான் ‘ரெண்டகம்’.
சினிமா தியேட்டரில் பார்ப்கார்ன் வியாபாரியாக மிக அமைதியான மனிதராக அறிமுகமாகும் அரவிந்த்சாமி, அடுத்தடுத்த காட்சிகளில் காட்டும் அதிரடி அமர்க்களம். அழகான ஹீரோ என்ற இமேஜ் கொண்ட அரவிந்த்சாமி, தன்னால் ஆக்ஷன் ஹீரோவாகவும் ஜொலிக்க முடியும் என்பதை பல காட்சிகளில் நிரூபித்திருக்கிறார்.
அரவிந்த்சாமிக்கு பழைய நினைவுகளை திரும்ப வர வைக்கும் முயற்சியில் இறங்கும் குஞ்சக்கோ போபன், காதல் காட்சிகளில் மட்டும் இன்றி ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்துகிறார். அரவிந்த்சாமியுடனான பயணம், சாச்சாவிடம் காட்டும் பாசம், என சாமானிய மனிதராக நேர்த்தியாக நடித்திருப்பவர், தான் யார்? என்பதை தெரிந்து கொண்ட பிறகு நடிப்பில் காட்டும் வேகம் படத்தையும் வேகமாக பயணிக்க வைக்கிறது.
குஞ்சக்கோ போபனின் காதலியாக வரும் ஈஷா ரெப்பாவின் அழகிலும், கவர்ச்சியிலும் உரைந்து போகும் ரசிகர்கள், அவருடைய சுயரூபம் தெரிய வரும்போது அதிர்ச்சியில் உரைந்துபோகிறார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் ஜாக்கி ஷெராப்பின் தோற்றமும், நடிப்பும் ஏதோ ஹாலிவுட் பட நடிகரை பார்ப்பது போல் இருப்பதோடு, அவரது ஸ்டைலிஷான நடிப்பு படத்திற்கும் பலம் சேர்க்கிறது.
ஆடுகளம் நரேன், அமல்டா லிஸ், ஜின்ஸ் பாஸ்கர், சியாத் யாது, அனீஷ் கோபால், லபான் ரனே, ஸ்ரீகுமார் மேனன் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர், நடிகைகளும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
கெளதம் ஷங்கரின் ஒளிப்பதிவில் படம் பிரமாண்டமாக இருப்பதோடு, ஒவ்வொரு காட்சிகளும் ஆல்பத்தை பார்ப்பது போல் மிக அழகாக இருக்கிறது. காதல் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஆக்ஷன் காட்சிகள் மூலம் மிரட்டியிருக்கிறார்.
அருள்ராஜ் கென்னடியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது.
எஸ்.சஞ்சீவின் கதை மற்றும் திரைக்கதை எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நிறைந்தவைகளாக இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். அதிலும், அரவிந்த்சாமி மற்றும் குஞ்சக்கோ போபனின் கதாப்பாத்திரங்களை வடிவமைத்த விதமும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.
மலையாள டப்பிங் படம் என்ற எண்ணம் ஏற்படாத வகையில் தமிழ் வசனங்களை மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார் சசிகுமரன் சிவகுரு.
படத்தை இயக்கியிருக்கும் பெளினி டி.பி, வழக்கமான கேங்ஸ்டர் கதையை வித்தியாசமான முறையில் இயக்கியிருப்பதோடு, காட்சிகளில் மட்டும் இன்றி கதாப்பாத்திரங்கள் மூலமாகவும் ட்விஸ்ட் வைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.
ரேட்டிங் 3.5/5
Comments are closed.