இயக்குநராகும் எழுத்தாளர் அஜயன் பாலா!

211

‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்‌ஷ்மி’, ‘தலைவி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய பங்காற்றியுள்ள அஜயன் பாலா, திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வருகிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஆறு அத்தியாயம்’ திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கியிருக்கும் அஜயன் பாலா, தற்போது முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக இயக்குகிறார். ஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர்.அர்ஜுன் வழங்குகிறார்.

மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்ட அழகான காதல் கதையான இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னை பிரசாத் லேபில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், நாக் ஸ்டுடியோஸ் கல்யாணம், இயக்குநர்கள் கே.பாக்யராஜ், சமுத்திரக்கனி, மிஷ்கின், விஜய் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு அஜயன் பாலா உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

‘கன்னி மாடம்’ படத்தில் நாயகனாக நடித்த ஸ்ரீராம் கார்த்திக் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ‘கோலிசோடா 2’ புகழ் கிரிஷா குருப் நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, முனீஷ்காந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

செழியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, லால்குடி இளையராஜா கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பாளராக நிகில் முருகன் பணியாற்றுகிறார்.

இப்படம் குறித்து கூறிய இயக்குநர் அஜயன் பாலா, “மனதைத் தொடும் காதல் கதை ஒன்றை மலைப்பகுதியின் பின்னணியில் மக்களுக்கு சொல்ல உள்ளோம். கதையை மட்டுமே நம்பி என்னுடன் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் இப்படத்தை தயாரிக்கும் மருத்துவர் அர்ஜுன் அவர்களுக்கும் நன்றி. திரைப்படத்தின் தலைப்பு மற்றும் இதர தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.” என்றார்.

Comments are closed.