‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘வெடிகுண்டு முருகேசன்’ போன்ற நகைச்சுவை படங்களை இயக்கிய கோவிந்தமூர்த்தி தற்போது இயக்கிவரும் படம் ‘பப்பாளி’. உலகத்தில் அழியாத சொத்து கல்வி தான். இந்த கல்வியால் மட்டமான வாழ்கையில் இருந்த கதாநாயகன் உயர் மட்டத்திற்கு போனானா இல்லையா என்பதுதான் ‘பப்பாளி’ படத்தின் திரைக்கதை. இந்தப்படத்தில் விஜய் டிவியின் சரவணன் – மீனாட்சி தொடரின் மூலம் புகழ்பெற்ற செந்தில் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இஷாரா நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் கோவிந்தமூர்த்தி, “நான் படிக்கும் காலத்தில் கல்லூரிக்கு பணம்கட்ட முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தினேன. அப்போதுதான் வைரமுத்து எழுதிய ‘சிற்பி, நான் உன்னை செதுக்குகிறேன்’ என்ற புத்தகத்தை படித்தேன். அதுதான் எனக்கு தன்னம்பிக்கையையும் வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தியது. அதுதான் சினிமாவுக்கு வர காரணமாகவும் அமைந்தது” என்று வைரமுத்துவுக்கு புகழாரம் சூட்டினார்.
