திரையுலகில் உள்ளவர்களும், தொண்டர்களும் விஜயகாந்த்தை மரியாதையுடன் குறிப்பிடுவது கேப்டன் என்றுதான். ஆனால் சில தினங்களுக்கு முன் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் விஜயகாந்த் கேப்டன் சொல்லை பயன்படுத்த தடைசெய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
விஜயகாந்த்திற்கு இந்த அடைமொழி வருவதற்கு காரணமாக அமைந்தது அவர் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ படம் தான். இந்தப்படத்தை இயக்கிய ஆர்.கே.செல்வமணி இதுபற்றி என்ன நினைக்கிறார்.? “பொதுவாக ஒரு டீமை தலைமையேற்று வழி நடத்துபவர்களை கேப்டன் என்று சொல்வது இயல்பான ஒன்றுதான்.. கிரிக்கெட்டிலும் கூட கேப்டன் என்ற சொல்தானே பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில் நடிகர்சங்கத்தலைவராக முன்னின்று அவர் பணிகள் செய்தபோதும், அதன்பின் அரசியல் கட்சி தொடங்கியபோதும் கேப்டன் என மரியாதையுடன் அழைத்து வருகின்றனர். அதனால் அது ஒரு பொதுவான வார்த்தை.. அவ்வளவுதான்.. தவிர விஜயகாந்த் எந்த இடத்திலும் கேப்டன் என்கிற பட்டத்தை தானாகவே சொல்லிக்கொண்டதே இல்லையே.. அதற்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும்” என்கிறார் ஆர்.கே.செல்வமணி.
