
ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக அறிமுகமாகும் லக்ஷ்மணுக்கு உண்மையிலேயே துணிச்சல் தான்.. எல்லோரும் கமர்சியல் படம் அதாவது மசாலா படம் எடுத்து காசு அள்ளவேண்டும் என நினைப்பார்கள் என்றால், இவர் தனது படத்துக்கே மசாலா படம் என தில்லாக பெயர் வைத்துள்ளார். படத்தில் பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா, புதுமுகம் கௌரவ் என மூன்று நாயகர்கள்.. கதாநாயகியாக நடிக்கிறார் லட்சுமி தேவி.
புதுமுகம் கார்த்திக் ஆச்சார்யா என்பவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தின் இசைத் தகட்டை வெளியிட்டார். விழாவில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ட்ரீம் வாரியார் எஸ்.ஆர்.பிரபு உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
டி.சிவா பேசும்போது, “பாபி சிம்ஹாவை பார்க்கும்போது ரஜினியை பார்த்த மாதிரியே இருக்கிறது என்று சொல்கிறார்கள். நானும் அதை ஆமோதிக்கிறேன்.. ஆனால் ரஜினி சூப்பர் ஸ்டார் என்கிற உயரத்திற்கு சும்மா வந்துவிடவில்லை. அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் அனைவரும் லாபத்தில் திளைத்தனர். நஷ்டப்பட்ட ஒன்று, இரண்டு பேருக்கும் கூட அவர் நஷ்ட தொகையை திருப்பி கொடுத்து ஈடு கட்டிவிட்டார். அதனால் உங்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் நன்றாக லாபம் சம்பாதிக்கவேண்டும்.. அவரை சேர்ந்தவர்கள் நன்றாக வாழவேண்டும் என மனதில் நினைத்து ஒவ்வொரு படத்திலும் நடியுங்கள்.. நிச்சயம் நீங்களும் ஒரு நாள் சூப்பர் ஸ்டார் என்கிற இலக்கை அடைவீர்கள்” என்று ஆலோசனை வழங்கினார்.. அதை பாபி சிம்ஹாவும் ஆமோதித்து ஏற்றுக்கொண்டார்.
Comments are closed.