ஒரு படம் சூப்பர்ஹிட்டாக ஓடினால் அதை வைத்து நாலு படங்களில் கமிட்டாகி நாலு காசு பார்ப்பதுதானே பொதுவான சினிமா வழக்கம். ஆனால் சமந்தா மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்? இத்தனைக்கும் தெலுங்கில் பவன்கல்யாணுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘அத்தரண்டிகி தாரெதி’ படம் அமர்க்காளமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வசூலும் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது. அதில் ஹீரோயினாக நடித்த சமந்தாவையும் வாய்ப்புகள் தேடி வருகின்றன.
ஆனால் புதிதாக வாய்ப்புகள் எதையும் தான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என ஸ்ட்ரைக்கில் குதித்திருக்கிறார் சமந்தா. உடனே சித்தார்த்துடன் திருமணம் செய்துகொள்ளப் போகிறார், அதனால்தான் படங்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறாரோ என கண்டபடி மனக்குதிரையை ஓட விடாதீர்கள்.
தன் மனதுக்குப் பிடித்த, தனக்கு பெயர் வாங்கித்தரும் என்று நம்புகிற கேரக்டர் தன்னை தேடிவந்தால், அந்தப்படத்தில் மட்டுமே நடிக்கப்போகிறேன் என்று அவரே தனது சமூக வலைத்தாளத்தில் குறிப்பிட்டுள்ளார். அதற்காக எவ்வளவு நாளானாலும் காத்திருக்க சமந்தா தயாராக இருக்கிறாராம். கிட்டத்தட்ட இவர் செலெக்ட் செய்திருப்பது அனுஷ்காவின் ரூட்டைத்தான்.
அனுஷ்கா தற்போது தமிழில் எந்த புதிய படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் தெலுங்கில் பாஹூபாலி, ராணி ருத்ரம்மாதேவி என இரண்டு சரித்திரப்படங்களில் நடித்து வருவதால் அந்தப்படங்களில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் அனுஷ்கா. அவற்றை முடித்தபின் தான் அடுத்த படங்களை ஒப்புக்கொள்ளும் யோசனைக்கே போவாராம். சமந்தாவும் இப்போது அனுஷ்கா வழியில் கிளம்பிவிட்டார் என்றுதான் தோன்றுகிறது.