எஸ்.ஏ.சியை ட்ரில் வாங்கிய இளம் இயக்குனர் : ‘நையப்புடை’ ஸ்பெஷல்?

184

Nayyapudai
19 வயது இளைஞர் இயக்கியுள்ள இந்த ‘நையப்புடை’ படத்தில் 73 வயது இளைஞரான எஸ்.ஏ.சந்திரசேகர் கதாநாயகனாக, அநீதிகளை தட்டிக்கேட்கும் முன்னால் ராணுவ வீரனாக நடித்துள்ளார் என்பதே இந்தப்படத்தின் ஸ்பெஷல் தான்.. இந்தப்படத்தை இயக்கியுள்ள விஜயகிரண், ஞாபகங்கள் படத்தை இயக்கிய இயக்குனர் ஜீவனின் மகன் ஆவார். கலைப்புலி தாணு இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.. தாணு, இதில் இன்னொரு கதாநாயகனான பா.விஜய் ரிப்போர்ட்டராக நடித்துள்ளார். கதாநாயகியாக சாந்தினி நடித்துள்ளார்.

இந்தப்படத்தின் அறிமுக விழா நேற்று நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட எஸ்.ஏ.சி, தனது த்ரில் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். “இந்தப்படத்தின் இயக்குனரிடம், தம்பி எவ்வளவு நேரத்தில் கதை சொல்வாய்? என்றேன் ‘ஒரு நிமிடம்’ என்று கூறி லேப் டாப் எடுத்து வைத்தார் .என்னப்பா இது?கதை சொல்லத் தெரியாதா.? எனக்கு வாய்வழியாக கதை சொல்லி, கேட்டுத்தான் பழக்கம்.

‘குஷி’ படத்தின் போது எஸ்.ஜே.சூர்யா கதை சொன்னார் .நானும் விஜய்யும் கதை கேட்டோம். வஜ்ராசனம் போட்டு உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு வசனம், காட்சி, சிறு சிறு நடிப்பு, நுணுக்கமான சில்மிஷங்கள் உள்பட எல்லாம் செய்துகாட்டி மூன்று மணிநேரம் கதை சொன்னார் எஸ்.ஜே. ‘பூவே உனக்காக’ படத்துக்காக விக்ரமன் இடையில் பாட்டெல்லாம் பாடி கதை சொன்னார்.

ஆனால் இந்த தம்பியோ ‘எனக்குக் கதை சொல்ல வராது லேப்டாப்பைப் பாருங்கள் ‘என்று என் பக்கம் லேப்டாப்பைத் திருப்பிவைத்தார். இதுதான் புதிய தலைமுறையின் அணுகுமுறை போல என்று நினைத்தேன் அப்படி லேப்டாப் முலம்தான் விஜயகிரண் கதை சொன்னார். படப்பிடிப்பும் லேப்டாப் உதவியுடன்தான் நடந்தது. ஆனால் அது ஒரு நல்ல அனுபவம்.

ஆரம்பத்திலேயே நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன். நான் காலையில் எவ்வளவு சீக்கிரம் வேண்டுமானாலும் வருகிறேன். மாலை 6 மணிக்கு மேல் என்னால் வேலைசெய்ய முடியாது. என்றேன். அப்படி காலை 7 மணிக்கு அவர்களை பழக்குவதற்கு சில நாள் ஆனது.

ஒரு நாள் ஒன்பதே முக்கால் ஆகியும் முதல் ஷாட் எடுக்க வில்லை. எல்லாரும் வந்து விட்டார்கள் என்னாச்சுப்பா என்றேன். காஸ்ட்யூம் பாக்ஸ் வரவில்லை என்றார்கள் ஷாட் எடுக்க காஸ்ட்யூம் பாக்ஸ் ஏன் ? எல்லாருமே சரியாக அவரவர் காஸ்ட்யூமை போட்டு இருக்கிறார்கள், இனியும் ஏன் முதல் ஷாட் தொடங்கவில்லை? என்றேன்.’காஸ்ட்யூம் பாக்ஸ் வேண்டும். அதில்தான் என் லேப்டாப் இருக்கிறது ‘என்றார் விஜயகிரண்.

‘ஏம்ப்பா சீன் நீதானே பண்ணின.? வாயால் சொல்லுப்பா, லேப்டாப் வேண்டாம்’ என்றேன் ஆனால் அவர் ‘அது சரிப்பட்டு வராது’என்று தவிர்த்தார். இப்போது தப்பைக்கூட சரியாக நம்பிக்கையாகச் செய்கிறார்கள். தப்பைக்கூட சரியாகச் செய்தால் அது தப்பே இல்லை என்று பாடலே பாடுகிறார்கள்.

படப்பிடிப்பில் கண்டைக்காட்சியில் 75 வயது ஆன எனக்கு டூப் எல்லாம் வைத்து தயாராக வைத்திருந்தார்கள். இருந்தாலும் உங்களால் முடியும், இயல்பாக இருக்கும் என்று எல்லாம் கூறி ஊக்கப் படுத்தியதால் என்னையே டூப் இல்லாமல் காரிலிருந்து ஏறி குதிக்க செய்து விட்டார் இயக்குநர் தம்பி. படம் பார்த்து நானே மிரண்டு போனேன். என்னை இப்போது நடிக்கச் சொல்லி வெற்றிமாறன் அழைத்துள்ளார்.இப்படிப் பலரும் என்னை அழைத்துள்ளார்கள்.

இப்படத்தில் என்னை வைத்து விஜயகிரண் ஆக்சன் செய்ய வைத்துள்ளார். காமெடி செய்ய வைத்துள்ளார்., நடனம் ஆடவைத்துள்ளார், குழந்தைகளோடு வயது மறந்து நடிக்க வைத்து திறமையாக வேலை வாங்கினார் விஜயகிரண்”

என தனது த்ரில் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

Comments are closed.