நன்றாக மதிப்பெண் வாங்கிய மாணவர்களையும் இந்த நீட் தேர்வு பாடாய்ப்படுத்துகிறது. அதற்கு இதோ ரத்தமும் சதையுமாக தனது உயிரையே பலிகொடுத்துள்ளார் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா. இந்த மரணம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையே உலுக்கியுள்ளது. மாணவியின் மரணத்துக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.5. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அனிதாவுக்கு, நீட் தேர்வு பெரும் இடியாக விழுந்தது.
”நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்கவேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும்; மருத்துவராகும் கனவு பறிபோய்விடும்” என உச்ச நீதிமன்றத்தில் அனிதா மனு அளித்தார். ஆனால், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சலிங் நடைபெற்றது. இதனால் மனமுடைந்த அனிதா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அனிதாவின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கிவிட்டது. நடிகர் ரஜினிகாந்த், “அனிதாவுக்கு நிகழ்ந்தது மிகவும் எதிர்பாராத ஒன்று. அவர் இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர், அனுபவித்த வலியையும் வேதனையையும் என் மனம் உணர்கிறது. எனது இரங்கலை அவரது குடும்பத்துக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் .

Comments are closed.