இளையராஜா இசையில் ராதாமோகன் இயக்கியுள்ள படம் ’60 வயது மாநிறம்’. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை எஸ்.பிக்சர்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற 31-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய பிரகாஷ்ராஜ், “ஈர்க்கக்கூடிய ஒரு விஷயத்தை காமெடியுடனும், தாக்கத்தை ஏற்டுத்தும்படியும் காட்டுவதற்கு ராதாமோகன் – விஜியால் மட்டுமே முடியும். ராதாமோகன் உலகத்தை பார்க்கும் பார்வையே வேறுவிதமாக இருக்கிறது. ஒரு அழகான விஷயம், ஒரு தேடல் பற்றிய ஒரு படம் இது. காணாமல் போனதை தேடுகிறோமா, தொலைத்ததை தேடுகிறோமா என்பது பற்றியது.
இந்த கதையை கேட்டு படத்தின் உரிமையை வாங்கிவிட்டேன். முதலில் இந்த படத்தை நான் தான் தயாரிக்க வேண்டும் என்றிருந்தேன். அரசியல் ரீதியாக நிறைய வேலைகள் இருந்தது. இந்த படத்தை தாணு சார் தயாரிக்க முன் வந்தார். அவருக்கு நன்றி. இந்த படத்தை அவர் தயாரித்ததால் படத்திற்கு ஒரு பெரிய பலம் வந்திருக்கிறது.
இந்த படத்தில் சமுத்திரக்கனி மிக முக்கியமான, வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு சிறிய படம் என்பதால் அவரிடம் நானே நேரில் சென்று கேட்டேன். பதில் ஏதும் சொல்லாமல் படத்தில் நடிப்பதாக அன்புடன் ஒப்புக் கொண்டார். அவரது கதாபாத்திரம் ரொம்ப முக்கியமானது, அழகாக வந்திருக்கிறது.
விக்ரம் பிரபு அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல தீனியாக நடித்திருக்கிறார். ஒரு நடிகராக என்னை ரசிக்க வைத்துவிட்டார். அவரிடம் ஒரு பக்குவம் இருக்கிறது. நான் அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்தால் இந்த படத்திற்கு நான் டப்பிங் பேசவில்லை.மற்றபடி ராதாமோகன் எனக்காக டப்பிங் பேசினார்” என்றார்

Comments are closed.