நடிகர்கள் : அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி, துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ்
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : டிஜோ டாமி
இயக்கம் : கார்த்திக் நரேன்
தயாரிப்பு : ஐங்கரன் இண்டர்நேஷ்னல் – கருணாமூர்த்தி
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியாகியிருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படமான ‘நிறங்கள் மூன்று’ ரசிகர்கள் கொண்டாடும்படி இருக்கிறதா? அல்லது குளறுபடியாக்கப்பட்டுள்ளதா?, விமர்சனத்தை பார்ப்போம்.
திரைப்படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நாயகன் அதர்வா, போலீஸ் இன்ஸ்பெக்டரான தனது தந்தை சரத்குமாரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் தனியாக வசிக்கிறார். பள்ளி மாணவரான துஷ்யந்த், தனது பெற்றோர் தனது விருப்பத்திற்கு எதிராக இருப்பதால் அவர்கள் மீது கோபமாக இருப்பதோடு, தனது பள்ளி ஆசிரியரான ரஹ்மானை நாயகனாக பார்க்கிறார்.
இந்த சமயமத்தில், ஆசிரியர் ரஹ்மானின் மகள் அம்மு அபிராமி திடீரென்று காணாமல் போகிறார். அவரை தேடும் பயணத்தில் மனிதர்களின் மற்றொரு முகங்கள் தெரிய வருவதும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் ‘நிறங்கள் மூன்று’.
போதையின் மூலம் கற்பனை உலகத்தில் வாழும் இளைஞராக நடித்திருக்கும் அதர்வா, சர்ச்சையான வேடமாக இருந்தாலும் அதை சரியாக கையாண்டிருக்கிறார்.
மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஹ்மான், தனது மற்றொரு நிறத்தின் மூலம் அதிர்ச்சியளித்தாலும், சமூகத்தில் நடக்கும் இத்தகைய அவலங்களுக்கான பின்னணி பற்றி யோசிக்க வைக்கிறார்.
சரத்குமார் காவல்துறை அதிகாரியாக நடிப்பது புதிதல்ல என்றாலும், காக்கி உடை அணிந்து அவர் ஏற்றிருக்கும் தந்தை கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்திய அசால்டான நடிப்பும் கைதட்டல் பெறுகிறது.
துஷ்யந்த் ஜெயப்பிரகாஷுக்கு பள்ளி மாணவருக்கான தோற்றம் இல்லை என்றாலும் துடிப்பான இளைஞராக சிறப்பாக நடித்திருக்கிறார். பள்ளி மாணவியாக நடித்திருக்கும் அம்மு அபிராமியும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
ஜேக்ஸ் பிஜாயின் இசை, டிஜோ டாமியின் ஒளிப்பதிவு, ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு அனைத்துமே எளிமையான கதையை சுவாரஸ்யமாக கடத்த உதவியிருக்கிறது.
ஒரு நாளில் நடக்கும் கதைக்கு நான் லீனர் முறையில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் நரேன், யூகிக்க முடியாத திருப்பங்கள் மூலம் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் படமாக மட்டும் இன்றி மனிதர்களுக்குள் இருக்கும் மற்றொரு நிறத்தின் மூலம் நல்ல மெசஜையும் சொல்லியிருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5
Comments are closed.