குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாஜா நிறுவனம்!

210

சுயாதீன இசை மற்றும் இசைக்கலைஞர்களை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட மாஜா நிறுவனம் பற்றி, சில இசைக்கலைஞர்கள் சமீபத்தில் சில குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்கள். அந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் மாஜா நிறுவனம், அதற்கான விளக்கத்தை தற்போது வெளியிட்டுள்ளது.

இது குறித்து மாஜா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுயாதீன இசையை உலக அரங்கிற்கு எடுத்துச்செல்லும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே மாஜா நிறுவனம். எங்களின் முதல் வெளியீட்டான ‘என்ஜாய் எஞாமின்’-யின் வெற்றி எமக்கும், இந்த பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதையிட்டு, இந்த சாதனையைப் படைத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். துரதிர்ஷ்டவசமாக இந்தப் பாடலின் வெற்றிக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு இடையே இருந்த சில முரண்பாடான கருத்துக்களால் இந்த வெற்றி பெரும் சர்ச்சைக்குள்ளானது.

எங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சமீபத்திய தவறான குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். சுயாதீன கலைஞர்களின் படைப்புகள் மற்றும் சுயாதீன இசைக்கான எங்கள் அர்ப்பணிப்புக்களில் நாங்கள் பொறுப்புடன் இருக்கிறோம். மேலும் நாங்கள் எங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்றாமல் அல்லது கலைஞர்களிடமிருந்து அவர்களுக்கான வருமானங்களை நிறுத்திவைக்கும் செயல்களை செய்யவில்லை.

இருப்பினும், நாங்கள் நம்பியிருந்தது போல் சம்பந்தப்பட்ட கலைஞர்களிடையே பாடலுக்கான பங்களிப்பு பற்றி ஒருமித்த கருத்து இல்லை. அதுதவிர, கலைஞர்களின் ஒப்பந்தக் கடமைகளின்படி, அவர்களின் நேரடி ஈடுபாடுகள் மற்றும் நேரடியாக சேகரிக்கப்பட்ட வருமானம் பற்றி நாங்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தாலும் அதற்கான எந்த வெளிப்பாடுகளோ அல்லது அறிக்கைகளோ எங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்தச் செயல்பாடுகளால் நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகாணும் முயற்சிகள் சிக்கல் நிலையிலுள்ளது.

இருந்த போதிலும், சம்பந்தப்பட்ட இரு கலைஞர்களுக்கு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. அது தவிர, அவர்கள் சார்பாக கணிசமான செலவுகளையும் மாஜா நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கும் இந்தச் சிக்கல் நிலை நியாயமாகவும், விரைவாகவும் தீர்க்கப்படுவதன் முக்கியத்துவத்தை புரிந்துக்கொண்டுள்ளோம். சமீபத்திய அவதூறான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, உரிய வழியில் அவற்றை நிவர்த்தியும் செய்வோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.