அதிரடி திருப்பங்கள் கொண்ட நாவல் படிப்பது போல படம் எடுக்கும் இயக்குனர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.. அப்படி எண்ணும்போதே முதல் விரலாக இருப்பவர் என்றால் சாட்சாத் இயக்குனர் கே.வி.ஆனந்த் தான்.. கமர்ஷியல் வித் மெசேஜ் என்பார்களே அதுதான் இவரது படங்களின் அடிநாதம்.
அதேபோலத்தான் இவர் படங்களுக்கு சுத்த தமிழில் பெயர் வைக்கும் பாலிசியும் ரொம்பவே பிரசித்தம். அப்படி வைக்கும் பெயர்கள் ரசிகர்களிடம் எளிதில் ரீச்சாகும் விதமாகவும் இருக்கும்.. அதேசமயம் படத்திற்கு பொருத்தமான தலைப்பாகவும் இருக்கும் என்பதுதான் ஹைலைட்..
அந்தவகையில் வரும் மார்ச்-31ஆம் தேதி தனது லேட்டஸ்ட் படைப்பான ‘கவண்’ மூலம் ரசிகர்களை குஷிப்படுத்த வருகிறார் கே.வி.ஆனந்த். ‘கவண்’ என்றால் குறிபார்த்து கல்லை எறிய உதவும் கருவி என்று அர்த்தமாம்.. கார்ப்பரேட் மோசடிகளை பற்றிய திரைப்படம் தான் ‘கவண்’. இதை மீடியா பின்னணியில் பரபரப்பாக சொல்லியிருக்கிறாராம். இந்தப்படத்திலும் கே.வி.ஆனந்த் வச்ச குறி தப்பாமல் சமூக நோக்கிலான சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிப்படவும் செய்யலாம்.
விஜய்சேதுபதி-மடோனா செபாஸ்டியன் என காதல் மூலம் நம் மனதை கடந்துபோன அழகு ஜோடி மீண்டும் ஒருமுறை இந்தப்படத்திற்காக ஜோடி சேர்ந்துள்ளார்கள்.. இக்கதையை எழுதும் போதே அவரை கதாநாயகனாக மனதில் வைத்து தான் எழுதினாராம் கே.வி.ஆனந்த். காரணம் கதாநாயகன் தன்னை பலர் அடித்தாலும் திருப்பி அடிக்கவே மாட்டாராம். இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதியால் மட்டுமே நடிக்க முடியும் என்பது கே.வி.ஆனந்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.
போன படத்தில் கார்த்திக்கை வில்லனாக்கி சர்ப்ரைஸ் கொடுத்த கே.வி.ஆனந்த், இந்தப்படத்தில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய போனஸாக இன்னொருவர் படத்தில் நடிக்கவே மாட்டேன் என பிடிவாதம் பிடித்த டி.ராஜேந்தரை முக்கியமான கேரக்டர் கொடுத்து அழைத்து வந்துள்ளார்.. இவர்கள் தவிர விக்ராந்த், பாண்டியராஜன் இருவருக்கும் இந்தப்படத்தில் முக்கிய வேலை இருக்கிறது.
அது மட்டுமல்ல அயன் படத்தில் வில்லனாக சேட்டு வீட்டுப்பையனாக நடித்த ஆகாஷ்தீப் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இந்தப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது. எது எப்படியோ, வரும் வெள்ளியன்று ரசிகர்களுக்கு செமத்தியான ட்ரீட் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி..

Comments are closed.