
எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக்கொண்டு இருக்காமல், நம்மிடம் இருக்கும் விஷயங்களை வைத்து நமக்கான தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ள முடியும் என நிரூபித்த ஒரு தன்னம்பிக்கை இளைஞனை பற்றிய கதை தான் இந்த கனவு வாரியம்..
ஒரு சிறிய கிராமத்தில் படிப்பை ஏழாம் வகுப்போடு நிறுத்திய மாணவன் அருண் சிதம்பரம், மின்சாரம தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு காட்டுகிறார்.. அவ்வப்போது சின்னச்சின்ன மின் சாதனங்களை புதுமையாக மாற்றி செயல்படுத்தி காட்டுகிறார்.. நாடெங்கும் மின் தட்டுப்பாடு அதிகமாகவே, தானே சொந்தமாக தனது ஊருக்கு மின்சாரம் வழங்கும் சாதனத்தை உருவாக்குவதற்கான வேலைகளில் இறங்குகிறார்.
ஊரார் அவரை கிறுக்கன், முட்டாள் என்றாலும் அவரது அப்பா இளவரசு, நண்பன் பிளாக் பாண்டி, ஓய்வுபெற்ற வாத்தியார் ஞானசம்பந்தம், காதலி ரியா சங்கர், காதலியின் அண்ணன் யோக் ஜேப்பி உள்ளிட்டோர் அவரது முயற்சிக்கு ஆதரவாக நிற்கின்றனர். பல தடைகளை கடந்து தான் நினைத்ததை அருண் சிதம்பரம் எப்படி சாதித்தார் என்பதுதான் கதை..
படிப்பறிவு இல்லாவிட்டாலும் புத்திக்கூர்மை உள்ள இளைஞன் ஒருவன், தான் நினைத்ததை சாதிப்பதற்குள் என்னவிதமாக எல்லாம் அவமானப்படுத்த படுவான் என்பதை தனது இயல்பான நடிப்பால் பிரதிபலித்திருக்கிறார் அருண் சிதம்பரம்.. படத்தின் இயக்குனரும் அவரே என்பதால், வசனங்களையும் பார்த்து பார்த்து எழுதியுள்ளார்..
நாயகி ரியா சங்கர் களையான துறுதுறு முகத்துக்கு சொந்தக்காரர்.. நடிப்பும் ஓரளவு பரவாயில்லை.. இது ஹீரோயிச கதையோ அல்லது காதல் கதையோ இல்லை என்பதால் நாயகன், நாயகி ஆகியோரை பற்றிய அதிக விமர்சனத்துக்குள் நாம் போக தேவையில்லை..
இதுவரை அடியாளாக, வில்லனாக மிரட்டி வந்த யோக் ஜேப்பியை இந்தப்படத்தில் கிராமத்திற்கு முன் மாதிரி மனிதனாக, இயற்கை விவசாயத்தில் சாதிக்க துடிக்கும் ஒருவராக பாசிடிவ் கேரக்டரில் பார்க்கும்போது ஆச்சர்யம் மேலிடவே செய்கிறது.. வழக்கமாக கடுப்பேற்றும் விதமாக காமெடி பண்ணும் பிளாக் பாண்டி, இதில் நிறைவாக, பக்குவமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மனைவி கரித்து கொட்டினாலும்கூட, மகனுக்கு ஊக்கம் தரும் அப்பாவாக இளவரசு, கிராமத்து குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் பெறவேண்டும் என சொந்தமாக நூலகம் அமைத்து நல்ல முயற்சிகளுக்கு துணை நிற்கும் ஓய்வுபெற்ற வாத்தியார் ஞானசம்பந்தம், பேங்க் அதிகாரி டி.பி.கஜேந்திரனை அதிரவைக்கும் கஸ்டமராக சில நிமிடங்கள் மட்டுமே வந்துபோகும் கிறேன் மனோகர் உட்பட பலரும் நிறைவான பங்களிப்பை தந்துள்ளார்கள்..
காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க அருண் சிதம்பரம் படும் சிரமங்களையும், யோக் ஜேப்பி இயற்கை விவசாயத்தில் சாதிப்பதற்கு முன் படும் சங்கடங்களையும் காட்டியதெல்லாம் சரி.. ஆனால் அவை நடப்பதற்காக சொல்லப்படும் கால அளவுகளை சரியாக சொல்வதில் கோட்டை விட்டிருக்கிறார்கள்.. குறிப்பாக ஒரு பேராசியரை தொடர்புகொள்ள சொல்லியும் அந்த விஷயத்தில் ரொம்பவும் மெத்தனமாக ஹீரோ செயல்படுவதை கவனித்து தவிர்த்திருக்கலாம்.
அதேபோல நாயகனின் கண்டுபிடிப்பில் இறுதிக்கட்ட பணிகள் எப்படி நிறைவேறின என்பதையும் யோக் ஜேப்பியின் இயற்கை விவசாய முறை வெற்றி பெற்ற விதத்தையும் சற்று டீடெய்லாக காட்டியிருந்தால் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூடியிருக்கும் என்பது உண்மை.. முக்கியமாக நாயகன் சிறுவயதாக இருக்கும்போது அவனிடம் தென்படும் ஆர்வமும் தீவிரமும், அவர் வாலிபரான பின் மிஸ்ஸிங் ஆனதை கவனித்திருக்கலாம்.
மற்றபடி நல்ல முயற்சி ஒன்றை மேற்கொண்டதற்காக இயக்குனர் அருண் சிதம்பரம் உள்ளிட்ட படக்குழுவினரை தாராளமாக பாராட்டலாம்.
Comments are closed.